அன்று டிஆர்.பாலுவுக்கு நடந்த கொடூர சம்பவம்.. கழுத்துச் சதையுடன் ஒட்டிய பனியன்.. வரலாறு சொன்ன ஆ.ராசா!
விருதுநகர் : கருணாநிதி ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, போராட்டம் நடத்திய நிலையில், போலீஸ் தாக்குதலில் ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்தார் டிஆர் பாலு. மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, அவர் அணிந்திருந்த பனியன் கழுத்துச் சதையோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் அதனைக் கழற்ற முடியவில்லை என டிஆர் பாலுவுக்கு நடந்த சம்பவம் பற்றிப் பேசியுள்ளார் ஆ.ராசா எம்.பி.
திமுக முப்பெரும் விழாவில், டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின். விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு தோளில் தட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
முன்னதாக, டி.ஆர்.பாலுவின் வாழ்க்கைக் குறிப்பை வாசித்தார் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. அப்போது அவர் பற்றிய நெகிழ்ச்சிகரமான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

திமுக முப்பெரும் விழா
திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகிய மூன்றையும் நினைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதியன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நடைபெற்று வருகிறது. முப்பெரும் விழாவில் தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திமுக சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

டிஆர் பாலுவுக்கு விருது
அதன்படி, இந்தாண்டு கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய முப்பெரும் விழாவில், டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின். விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு தோளில் தட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். முன்னதாக, டி.ஆர்.பாலுவின் வாழ்க்கைக் குறிப்பை வாசித்தார் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.

65 ஆண்டுகளுக்கும் மேலாக
டி.ஆர்.பாலு பற்றி ஆ.ராசா பேசுகையில், 'பள்ளியில் படிக்கும்போதே இளமுருகு என்ற பெயரில் திமுகவில் உறுப்பினராக இணைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வருகிறார். சென்னையில் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக அரசுப் பணியில் சேர்ந்த பிறகும், திராவிட இயக்கத்தின் பால் கொண்ட பற்று குறையாமல் அரசுப் பணியைத் துறந்து, திமுகவில் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.

அரசுப் பணியை துறந்து
திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள டிஆர் பாலு தற்போது திமுக பொருளாளராகச் செயல்பட்டு வருகிறார். 1986ல் ராஜ்யசபா எம்.பி ஆனார். அன்று முதல் இன்று வரை இந்திய நாடாளுமன்றத்தில் கருணாநிதியின் குரலாக முழங்கி வருகிறார். முரசொலி மாறன் மறைந்த பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகளை 2004 முதல் 104 வரையும் 2019 முதல் இன்று வரையும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

துப்பாக்கிக் கட்டையால்
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்த கருணாநிதி தலைமையிலான அரசு ஜெயலலிதா - வெங்கட்ராமன் கூட்டணியால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு கலைக்கப்பட்டபோது, இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக பெரும் போராட்டம் நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயம் எதிரில் களத்தில் இறங்கிய டிஆர் பாலு 6 பேர் கொண்ட ஆயுதக் காவல் படையினரால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டு துப்பாக்கிக் கட்டையால் அடிக்கப்பட்டார்.

பனியனை கத்தரித்து
ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்தார் டிஆர் பாலு. மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, அவர் அணிந்திருந்த பனியன் கழுத்துச் சதையோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் அதனைக் கழற்ற முடியவில்லை. அப்போது மருத்துவர்கள், கத்தரிக்கோல் கொண்டு பனியனை கத்தரித்து எடுத்தனர். அந்த கொடுபாதக செயலுக்கு மூலகாரணமாக இருந்தவர் அன்றைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜசேகர் நாயர். கருணாநிதி ஆணையை நிறைவேற்றும் வகையில் கழகத்தின் அத்தனை போராட்டங்களிலும் வீறுகொண்டு பங்கேற்று இன்னல்களை அனுபவித்தவர்" என அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications