நாடாளுமன்றத்தில் வரப்போகும் மேஜர் மசோதா.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்
சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அனைத்து எம்பிக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணையில் இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்தம், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' போன்ற மசோதாக்கள் முன் வைக்கப்பட்டால் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 25-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 20-ந் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் வக்பு சட்ட திருத்த மசோதா, கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பஞ்சாப் கோர்ட்டுகள் திருத்த மசோதா, கடல்சார் கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்பட 15 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் ஆகும். குறிப்பாக சொல்வது என்றால், இதில் 8 மசோதாக்கள் லோக்சபாவிலும், 2 மசோதாக்கள் ராஜ்யசபாவிலும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலுவையில் உள்ள மசோதாக்களில் வக்பு சட்ட திருத்த மசோதா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்த கடந்த கூட்டத்தொடரில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன், அம்மசோதா விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் கடைசி நாளில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூட்டுக்குழுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications