ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது.. பவள விழா கொண்டாட்டம்.. திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியார் விருதுக்கு பாப்பம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
திமுகவின் தாய் கழகமான திராவிட கழகத்தை நிறுவியவர் தந்தை பெரியார். பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. தொடக்க காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பிற்பகுதியில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து அண்ணா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது அண்ணா மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்து, கடைசி வரை திமுக பொதுச் செயலாளராகவே அறிஞர் அண்ணா இருந்தார். அதேபோல அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெறுகிறது.
திமுகவின் முக்கிய விழாக்களில் ஒன்றாக இருக்கும் இந்த முப்பெரும் விழாவில், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் ஆகியோர் கவுரவிக்கப்படுவார்கள். இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவையொட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருது ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications