திருக்கோவிலூரில் இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா? பொன்முடி தீர்ப்பிற்கு பிறகு என்ஆர் இளங்கோ பரபர
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா என்பது குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ விளக்கமளித்துள்ளார்.
திமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. இவர் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் எம்எல்ஏவாக இருந்த இவர், தமிழக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் 3 ஆண்டுகள் தண்டனை அளித்தது.

இதையடுத்து அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மேல் முறையீடு செய்துள்ளார்.
என்ஆர் இளங்கோ: இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்குத் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் அவர் மீண்டும் எம்எல்ஏவாகவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பொன்முடி விடுதலை குறித்தும் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா என்பது குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கீழமை நீதிமன்றம் பொன்முடி வழக்கை விசாரித்து அவர் மீது தவறு இல்லை என்று சொல்லி விடுதலை செய்திருந்தது. இருப்பினும், இது குறித்து விசாரித்த சென்னை ஐகோர்ட் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார். அதில் அவர் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.
அதில் முக்கியமாக விடுதலை எதிர்த்த மேல்முறையீட்டுத் தீர்ப்புகளில் இரண்டு கருத்துகளுக்கு இருக்குமானால், விடுதலையை உறுதி செய்ய வேண்டுமே தவிர.. வேறு ஒரு பார்வை இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மட்டும் விடுதலையை மாற்றி தண்டனை தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தோம்.
இடைத்தேர்தல் நடக்குமா: என்னைப் பொறுத்தவரை நீதிமன்றம் இப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பே நிறுத்தி வைக்கப்படும். இதனால் இடைத்தேர்தல் நடக்காது. கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பொன்முடி தனது பதவியில் நிச்சயம் தொடர்வார்.
ராகுல் காந்தி மான நஷ்டஈடு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அரசு பங்களாவையும் காலி செய்ய வேண்டி இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு மீண்டும் அவரே எம்பி ஆனார். அதேபோலத் தான் இதுவும் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறாது என்றே கருதுகிறேன்" என்றார்.
பொன்முடி: கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் .பொன்முடி.. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்குச் சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2011இல் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை முதலில் விசாரித்த விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டை விசாரித்த சென்னை ஐகோர்ட், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications