வெளிநாடுகளில் பலியாகும் இந்தியரின் உடலை கொண்டுவர மத்திய அரசு நிதியுதவி செய்கிறதா? ஷாக் பதில்
சென்னை: வெளிநாடுகளில் எதிர்பாராமல் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை, சொந்த நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நிதியுதவி செய்கிறதா? அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தலையில் இதற்கான செலவுகள் கட்டப்படுகிறதா? என்பது குறித்து திமுக எம்பி பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு கூறியிருக்கும் பதில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இது குறித்து தனது x பக்கத்தில் வில்சன் பகிர்ந்திருப்பதாவது, "வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியக் குடிமக்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவது குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்வி, உடல்களைக் கொண்டுவரும் முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறதா? துயரிலுள்ள குடும்பங்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளனவா? கண்ணியத்தையும் நிதி நிவாரணத்தையும் உறுதிப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பனவற்றை மையப்படுத்தியது.

ஏன் இந்த கேள்வி?
வெளிநாட்டிலுள்ள இந்தியத் தூதரகங்கள், உடல்களைத் தாயகம் கொண்டுவர கணிசமான தொகையைக் கேட்டதாகப் பல குடும்பங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
உதவி என்பது கட்டாயமல்ல
ஆனால், வெளியுறவு அமைச்சகத்தின் பதில், 'இந்திய சமுதாய நல நிதி' (ICWF) மூலம் நிதிச் சான்று அடிப்படையில் மட்டுமே உதவி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. முதலாளிகள் அல்லது காப்பீட்டாளர்கள் செலவை ஏற்கத் தவறும் தகுதியான வழக்குகளில் மட்டுமே இந்தச் செலவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உதவி என்பது கட்டாயமல்ல, அரசின் விருப்பத்தைப் பொறுத்த ஒன்றாகிவிட்டது.
வெளிப்படையான தகவல்கள் இல்லை
இது, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமகனின் ஈமச்சடங்குப் பொறுப்பு ஒரு இறையாண்மை கடமை என்பதை அரசு ஏற்காமல், சுமையை தனியாரும், துயரில் உள்ள உறவினர்களும் மீது சுமத்துவதாக விமர்சிக்கப்படுகிறது. மேலும், உதவி மறுக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து எத்தனை புகார்கள் வந்தன, கோரிக்கைகளைச் செயல்படுத்த எவ்வளவு காலம் ஆனது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை முற்றிலுமாக இல்லை.
அரசியலமைப்பு என்ன சொல்கிறது?
ஒவ்வொரு இந்திய பாஸ்போர்ட்டும் குடியரசின் பாதுகாப்பையும், வெளிநாட்டில் இறந்தாலும் அரசியலமைப்பு உரிமைகளையும் உறுதி செய்கிறது. இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வரும் "கண்ணியமான அடக்கம் செய்யும் உரிமை" என்பது விமான நிலையத்திலோ, மரணத்திலோ முடிந்துவிடக்கூடாது. முறையான இறுதிச் சடங்குகள் கிடைக்கும் வரை இந்த அடிப்படை உத்தரவாதம் இந்திய எல்லைகளைத் தாண்டி நீடிக்க வேண்டும்.
ஷாக் பதில்
வெளியுறவு அமைச்சகத்தின் பதில் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. எனவே வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கோரிக்கை வைக்கிறேன். விருப்பத்தின் பேரில் வழங்கும் கருணையிலிருந்து, உத்தரவாதமான பொறுப்புக்கு மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உயிரிழக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உடலைத் தாயகம் கொண்டுவருவது ஒரு உத்தரவாதப்பட்ட உரிமையென அறிவிக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த நோக்கத்திற்காக ஒரு பிரத்யேகமான, லாப நோக்கற்ற பட்ஜெட் ஒதுக்கீட்டை உருவாக்கவும், உலகெங்கும் துயரிலுள்ள குடும்பங்களுக்கு உதவ 24/7 செயல்படும் அவசர தேசிய ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications