இன்பநிதியை முதல்வராக்கிவிட்டுத்தான் என் உயிர் போகணும் என பேசிய விபி ராஜனுக்கு திமுக சார்பில் விருது!
சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் விருது திமுக தலைமைக் கழகப் பேச்சாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.பி.ராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் வி.பி.ராஜன். இன்பநிதியை முதலமைச்சராக்கிவிட்டுத்தான் என் உயிர் போக வேண்டும் என்றும் பேசியவர் வி.பி.ராஜன்.
வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவினை ஒட்டி முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த வி.பி.ராஜன்? : திமுக தலைமைக் கழக பேச்சாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.பி.ராஜன், திமுக முப்பெரும் விழாவில் பேராசிரிய விருது பெற இருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் வி.பி.ராஜன். அதன் பிறகு 1996 தேர்தலிலும் வென்று எம்.எல்.ஏ ஆனார். திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான வி.பி.ராஜன், இன்பநிதியை முதலமைச்சர் ஆக்குவோம் எனப் பேசி பரபரப்பைக் கிளப்பியவர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கடலூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் வி.பி.ராஜன். உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில் கடுமையாக எழுந்த வாரிசு அர்சியல் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விபி ராஜன் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின்: விபி ராஜன் பேசுகையில், "உதயநிதிக்கு திறமை இருப்பதாலேயே அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. திமுககாரர்களே ஏற்றுக்கொள்ளும் போது வெளியே இருப்பவர்களுக்கு என்ன வந்தது? உழைப்பால் உதயநிதி முன்னேறி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக கூட வருவார்.
இன்பநிதியை முதல்வர் ஆக்கவேண்டும்: எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. ஆனால் அதுவரை எனக்கு ஆயுள் இருக்குமா என்பது தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதலமைச்சராக்கி விட்டு தான் என் உயிர் போக வேண்டும். இன்பநிதி வரும் காலத்தில் தமிழக முதல்வர் ஆவார்" எனப் பேசி பரபரப்பைக் கிளப்பி இருந்தார் விபி ராஜன்.
ஈரோடு மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி அரசியலுக்கு வருவார், அமைச்சராக ஆவார் என நான் பேசினேன். அது இன்று பலித்தது போல் இன்பநிதி விவகாரத்திலும் நான் கூறியது நடக்கும் எனப் பேசினார் ராஜன்.
துணை முதல்வர்: கருணாநிதி காலத்தில் இருந்து பேச்சாளராக திமுக மேடைகளை அதிரவிடும் விபி ராஜன், இன்பநிதி முதலமைச்சராக வருவதைப் பார்க்க வேண்டும் என பேசியது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், விபி ராஜனுக்கு பேராசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு வி.பி.ராஜன், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவார் எனப் பேசிய நிலையில், தற்போது உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட இருப்பதாக பேச்சுகள் தீவிரமாக எழுந்துள்ளன. அமைச்சர்கள் பலரும், உதயநிதி விரைவில் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார் எனப் பேசத் தொடங்கியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பி வந்ததும் உதயநிதி, துணை முதல்வர் ஆக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications