'மொத்தம் 21!' அப்படியே அள்ள திமுகவின் பக்கா ஸ்கெட்ச்..கூட்டணியை சமாளிக்க வைத்திருக்கும் "பிளான் பி"
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதமே தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தேர்தல் சற்றே தாமதம் ஆனது.
பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
தேர்தல்
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப இந்த முறை தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் பிப். 7 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி
அதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே இதில் மெகா வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக!
பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இப்போது அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதால் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை திமுக தரப்பில் மாவட்ட அளவிலேயே தேர்தல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக திட்டம்
திமுகவில் மொத்தம் 77 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், அவர்களுடன் தான் மற்ற கூட்டணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். கடந்த 9 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளதாலும் எதிர்ப்புகள் பெரியளவில் இல்லை என்பதாலும் அதிகபட்ச இடங்களில் போட்டியிட விரும்புகிறது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் 12 ஆயிரம் கவுன்சிலர் பதவிகளை நிரப்பத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் குறைந்தது 80%, அதாவது 10 ஆயிரம் இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகள்
அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலில் தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்படாததால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அதிகப்படியான இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. குறிப்பாக தங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏற்கனவே எம்பி மற்றும் எம்எல்ஏக்களாக உள்ள தொகுதிகளில் இருக்கும் மாநகராட்சி. நகராட்சி பதவிகளைக் கூட்டணிக் கட்சிகள் கேட்கின்றனர்,
திமுக மா.செக்கள் ஐடிய
ஆனால், திமுகவின் திட்டமோ வேறாக உள்ளதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகள் கிடைப்பது சிரமம் என்பது கூட்டணிக் கட்சிகளின் அச்சம். இருப்பினும், பெரும்பான்மை தொகுதிகளில் திமுக வென்றாலும் கூட, நகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அப்பதவிகள் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறோம் என்று மா.செக்கள் உறுதி அளிக்கிறார்களாம். இதனால் கூட்டணிக் கட்சிக்குக் குறைந்த அளவில் இடங்களை வழங்கவே மாசெக்கள் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 21
மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சி மேயர் பதவிகள் உள்ள நிலையில், அனைத்து மேயர் பதவிகளிலும் திமுகவை சேர்ந்தவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது அக்கட்சியின் முக்கிய மாவட்ட செயலாளர்களின் விருப்பமாக உள்ளது. அதற்குப் பதிலாக வேண்டுமென்றால் கூடுதலாக சில இடங்களில் துணை மேயர் பதவிகளைக் கொடுக்கலாம் என்று மாற்று யோசனை தருகிறார்களாம்.
மழுப்பல்
இன்று அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம் எத்தனை மாநகராட்சி அல்லது நகராட்சிகள் வேண்டும் என விருப்பம் தெரிவித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வார்டு கவுன்சிலர்களுக்கு தான் தேர்தல் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற்றதும், அதன் பின்னர் மாநகராட்சி, நகராட்சி குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
உத்தரவாதம் இல்லை
தற்போதைய சூழலில் மாநகராட்சி அல்லது நகராட்சி பதவிகளைக் கொடுக்கிறோம் எனக் கூட்டணிக் கட்சிகளுக்கு உறுதி அளிக்க திமுக தயாராக இல்லை. ஏதுவாக இருந்தாலும் வார்டு கவுன்சிலர்கள் முடிவுகள் வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என விரும்புகிறது திமுக! ஆனால் முன்னதாக பேசி முடிவெடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும் என்று கருதுகிறது கூட்டணிக் கட்சிகள்!