"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்!
சென்னை: தனது மகள் திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என நடிகர் சத்யராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'என் மகள் கடின உழைப்பாளி, அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ்.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில், திவ்யா சத்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா சத்யராஜுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே, சத்யராஜின் உடன் பிறந்த சகோதரி கல்பனாவின் மகன் மகேந்திரனுடன் திருமணம் நடந்ததாகவும் திருமணமான அடுத்த 5 நிமிடத்திலேயே திவ்யா தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டார் என்றும் கூறியது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் மகள் திவ்யா குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகளில் எதுவும் உண்மையல்ல, என் மகள் கடின உழைப்பாளி, கண்ணியமானவர் மற்றும் திறமையால் சுயமாக முன்னேறிய பெண்மணி. என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமையடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறியவர் நடிகர் சத்யராஜ். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நடிப்புக்காக சொந்த ஊரான கோயம்புத்தூரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து, பல கஷ்டங்களையும் சவால்களையும் தாண்டி சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர் தற்போது வரை அவரது கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்.

சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மேலும், திமுகவில் பொறுப்பு வகிக்கிறார். திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரமும் மேற்கொண்டிருந்தார். சத்யராஜின் மகன் சிபிராஜ் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளாத்தில் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications