சேப்பாக்கத்தில் புர்கா அணிந்து கள்ள ஓட்டு பதிவு செய்ய திமுக திட்டம்.. தவெக வேட்பாளர் செல்வம் புகார்
சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் புர்கா அணிந்து கள்ள ஓட்டு பதிவு செய்ய திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தவெக வேட்பாளர் செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக அளவில் கள்ள ஓட்டுகள் பதிவாகும் அபாயம் இருப்பதாகவும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செல்வம் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வேட்பாளர் செல்வம், "சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவினர் துணிச்சலாக இலவச பொருட்கள் வழங்குவது, பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள். கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளார்கள். எங்களது நிர்வாகிகளை மிரட்டல், விலைப்பேச முயற்சி செய்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய பெண்கள் உடையில் போலி வாக்குகள் செலுத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளார்கள். சில இடங்களில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து வாக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்கள். புர்கா ஆடையில் போலி வாக்காளர்களை அனுப்பி வாக்களிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதிகமாக பணம் கொடுப்பதாக கூறி பூத்துகளில் வேலை செய்ய வேண்டாம் என்று மிரட்டுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார். மேலும், வாக்காளர் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் செல்வம் வலியுறுத்தினார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை பொறுத்தவரை திமுகவின் கோட்டையாகும். இங்கு திமுக தான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை வென்ற தொகுதியாகும். இறுதியாக 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜெ அன்பழகன் வெற்றி பெற்றிருந்தார். இவரது மறைவுக்கு பின்னர் 2021ல் உதயநிதி ஸ்டாலின் களம் இறங்கினார். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார். மீண்டும் இந்த முறை களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து தவெக சார்பில் களம் இறங்கி உள்ள செல்வம் புர்கா அணிந்து கள்ள ஓட்டு பதிவு செய்ய திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications