ஆரம்பிக்கலாங்களா? 18 தொகுதிகளில் ஒத்தைக்கு ஒத்தை மோதும் திமுக-பாமக... செம போட்டி!
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மொத்தம் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் திமுக-பாமக நேரடியாக களம் காண்கின்றன.
வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5% உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து விட்டதால் அது பாமகவுக்கு மிகப்பெரிய பலமாகும்.
இந்த 18 தொகுதிகளிலும் திமுக-பாமக இடையே கடும் இழுபறி நிலவப் போகிறது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

திமுக வேட்பாளர் பட்டியல்
சட்டசபை தேர்தலில் கிளைமேக்ஸ் காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. வேட்பாளர் பட்டியலை வெளியிட தாமதம் செய்த திமுகவும், இன்று அதனை அறிவித்து விட்டது. இந்த முறை வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள திமுக, சீனியர்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அதிமுக அமைச்சர்கள் பலர் மீண்டும் களமிறங்குவதால் அவர்களுக்கு டப் கொடுக்க சீனியர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாக்கு வங்கி உள்ள பாமக
இந்த தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்து திமுகவுக்கு எதிரியாக விளங்கி வருவது பாஜக. திமுகவும், பாஜகவும் சுமார் 14 இடங்களில் நேரடியாக மோதுகின்றன. பாஜகவுக்கு தமிழகத்தில் அந்தளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதால் இந்த தொகுதிகளில் திமுக எளிதில் வெற்றிவாகை சூடி விடும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திமுகவுக்கு மிகவும் சவால் அளிக்கக்கூடிய கட்சி எதுவென்றால் அது பாமக. வடமாவட்டங்களில் சில இடங்களில் பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ளது.

18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மொத்தம் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் திமுக-பாமக நேரடியாக களம் காண்கின்றன.அதாவது செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், வந்தவாசி, பென்னாகரம், தருமபுரி, திருப்பத்தூர், மேட்டூர், சேலம், மேற்கு, கும்மிடிப்பூண்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, பூந்தமல்லி(தனி), ஆற்காடு, காஞ்சிபுரம், நெய்வேலி, ஆத்தூர், சங்கராபுரம், கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளில் பாமக,, திமுகவை எதிர்த்து போட்டியிடுகிறது.

வன்னியர் இடஒதுக்கீடு பாமகவுக்கு பலம்
இதில் பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜிகே மணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் அவரை எதிர்த்து பி.என்.பி. இன்பசேகரன் களத்தில் குதித்துள்ளார். திமுக, பாஜகவைபோல் பாமகவை எளிதில் ஓவர் டேக் செய்து விட முடியாது. ஏனென்றால் பாமகவுடன், திமுக மோதும் பெரும்பாலான இடங்கள் வன்னியர்கள் சமுதாயம் உள்ள தொகுதியாகும். வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5% உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து விட்டதால் அது பாமகவுக்கு மிகப்பெரிய பலமாகும்.

என்ன செய்ய போகிறது திமுக?
அரசின் அறிவிப்பால் சந்தோஷ கடலில் மிதந்து வரும் வன்னியர் சமுதாய மக்கள் கண்ணை மூடிக்கொண்டு அதிமுக-பாமக கூட்டணிக்கு ஒட்டுப் போட வாய்ப்புகளும் உள்ளன. ''வன்னியர் இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான அவசர அறிவிப்பு. உங்கள் மீது பாமகவுக்கும், ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இருந்திருந்தால் முதலிலேயே அறிவித்து இருப்பார்கள்'' என்ற விளக்கத்தை மக்களிடம் எடுத்துக் கூறியும், தமிழக அரசு மக்களுக்கு செய்து முடிக்காத பணிகளை சுட்டிக்காட்டியும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அங்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். மொத்தத்தில் இந்த 18 தொகுதிகளிலும் திமுக-பாமக இடையே கடும் இழுபறி நிலவப் போகிறது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications