Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது போக வேண்டிய இடம்! மனம் திறந்து பேசிய 'உங்களில் ஒருவன்' ஸ்டாலின்

தமிழர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது போக வேண்டிய இடம் பற்றி விவரிக்கும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது போக வேண்டிய இடம் கீழடி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏன் அங்கு செல்ல வேண்டும், அப்படி என்ன சிறப்புகள் உள்ளன என்பது பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி 'தோள் கொடுப்பான் தோழன்' என ஒற்றை வரியில் பஞ்ச் டயலாக் அடித்துள்ளார்.

DMK President and Chief Minister Stalins answers to questions in the Ungalil oruvan series

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் 'உங்களில் ஒருவன் பதில்கள்" தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:

1. கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது?

பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?

2. கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?

பதில்: 'தோள் கொடுப்பான் தோழன்' என்பதன் அடையாளம் அவர்கள்!

3. கேள்வி: கிராமப்புறப் பெற்றோர், மாணவ, மாணவியரிடம் "நான் முதல்வன்" திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: நன்றாக ஏற்பட்டிருக்கிறது! கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கபட்டதிலிருந்து இந்த ஆண்டு மார்ச் 1 வரை தமிழ்நாட்டிலுள்ள 1300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டமே அனைத்து மாணவர்களுக்குமானதுதான். நகர்ப்புற மாணவர்களாவது பயிற்சி மையங்களுக்கு போகின்ற வாய்ப்பு அதிகம். கிராமப்புற மாணவர்களுக்குத்தான் 'நான் முதல்வன்' திட்டமானது அதிகமாகத் தேவை. தமிழக இளைஞர்கள் அனைவரும் நான் முதல்வன் எனச் சொல்ல வைக்கும் இந்த திட்டத்தை, எனது தொடர் கண்காப்பில் வைத்திருக்கிறேன்.

4. கேள்வி: ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே... ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?

பதில்: இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

5. கேள்வி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்களது கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்க கூடாது.

6. கேள்வி: வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்: தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. திரிபுராவில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்துவிட்ட காரணமாக காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி தோல்வியைத் தழுவி பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்துவிட்டார்கள்! நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறார்கள்! கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரிபுரா, நாகாலாந்து பற்றிப் பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவது இல்லை? அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகள் 59.

59 தொகுதியிலும் போட்டியிட்ட பா.ஜ.க., இரண்டே இரண்டு இடங்களில்தான் வென்றது. பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கியதன் மூலமாக ஆளும்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது பா.ஜ.க. இந்த மாதிரியான பிம்பங்களைக் கட்டமைத்து, தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதைபோல காட்டி கொள்கிறார்கள்.

Polarization, Social Engineering, Media Management - இந்தச் சொற்களுக்கான பொருளைப் புரிந்துகொண்டாலே, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகளைப் புரிந்துகொள்ளலாம்.

7. கேள்வி: கீழடி அருங்காட்சியகத்தை நீங்கள் திறந்து வைத்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் பிரமாண்டமாக இருக்கிறதே?

பதில்: நேரில் சென்று பாருங்கள், இன்னும் பிரமிப்பாக இருக்கும். நாங்கள் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் இருந்து, கீழடிக்காகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் - மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். எங்களுடைய தொடர் வற்புறுத்தலால்தான், அகழாய்வுப் பணியே நடந்தது. அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று தொடர் கோரிக்கை வைத்தேன். வெறும் அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு, எந்த பணியையும் செய்யாமல் இருந்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன்தான், அந்தப் பணியை விரைவுபடுத்தி, இப்போது முடித்திருக்கிறோம். அந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்துப் பார்க்க தொடங்கியதும், என்னால் நகரவே முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. 2600 ஆண்டுகளுக்கு முன்னால், கீழடியில் வாழ்ந்த மக்கள் என்னவெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டுபிடித்து, சேகரித்து நமது அரசு காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் நின்று ஆர்வத்தால், selfie (தாமி) எடுத்துக்கொண்டேன். எத்தகைய நாகரிகமும், பண்பாடும் கொண்டவர்களாகத் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை அறியும்போது பெருமையாக இருந்தது. அருங்காட்சியகம், காணொலி, தொடுதிரை, 3D எனத் தொழில்நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது பெயரினைத் தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். அனைவரும் நேரில் சென்று பாருங்கள். உலகத் தமிழர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி வந்து பாருங்கள். இதே போல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

8. கேள்வி: நேற்று மகளிர் தினம். மகளிருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நிமிர்ந்த நன்னடை - நேர்கொண்ட பார்வை - நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிச்சல் கொண்டவர்களாக மகளிர் அனைவரும் உயர வேண்டும் என்பதே எனது எண்ணம். அனைத்து மகளிரும் படிக்கவேண்டும், உயர்கல்வியைப் பெற வேண்டும். உரிய வேலைகளுக்குச் செல்ல வேண்டும். திருமணம் - குழந்தைகள் - குடும்பம் ஆகியவற்றோடு நிறைவடைந்துவிடாமல், சமூகப் பங்களிப்பைத் தங்கள் வாழ்நாள் முழுக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பெண்களுக்கு நான் சொல்வதைவிட, ஆண்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல நினைக்கிறேன்... பெண்களைக் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும் - இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

9. கேள்வி: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?

பதில்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்! பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும். இந்தச் செய்தி கிடைத்ததும், உடனே எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். தமிழ்நாடும் - தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநிலச் சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

10. கேள்வி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறதே?

பதில்: இந்தியாவை வளர்த்துள்ளோம்... வளர்த்துள்ளோம் என்று பா.ஜ.க சொல்வது எது தெரியுமா? 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய். இப்போது ஒரு சிலிண்டரின் விலை 1,118 ரூபாய் 50 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா. இப்போது விலை 102 ரூபாய் 63 பைசா. ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா. இப்போது விலை 94 ரூபாய் 24 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம்! இதுதான் பா.ஜ.க.வால் இந்தியா அடைந்த வளர்ச்சி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+