மக்கள் பிரச்சனைகளில் அதிமுக அரசு பாவ்லா செய்கிறது... மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: மக்கள் கோரிக்கைகள் தீர்க்கப்படுவதாக அரசு பாவ்லா செய்வதாகவும், சொத்து வரி விஷயத்தில் 16 மாதங்கள் கழித்து அரசு தாமத முடிவு எடுத்துள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், உயர்த்தி வசூலிக்கப்பட்ட சொத்துவரி மற்றும் குடிநீர்க் கட்டணத்தை காசோலையாகவோ ரொக்கமாகவோ மக்களுக்கு உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்கள் மற்றும் தி.மு.க. வெகுண்டெழுந்து போராடிய போதும் திரும்பப் பெறப்படாத சொத்துவரி உயர்வு உள்ளாட்சித் தேர்தலுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அடம்பிடித்த அரசு
மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதும், முதல்நிலை எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போதும், "முடியவே முடியாது" என்று அடம்பிடித்த அதிமுக அரசு, "சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகாராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 1.4.2018 முதல் 50 முதல் 100 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்துவரி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும்" என்று "உள்ளாட்சித் தேர்தல்" அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது.

மக்கள் முதுகில் வரி
தேர்தல் என்றதும் மக்களைப் பற்றிய நினைவு. தேர்தல் முடிந்ததும் மக்கள் முதுகில் வரி, கட்டண உயர்வு போன்ற சுமைகள்" என்று செயல்படும் முதலமைச்சர் திரு. பழனிசாமியின் அரசு, முதலில் "பொய் சொல்வதும்" பிறகு "வாபஸ் பெறுவதுமாகவே" தனது ஆட்சிக் காலத்தை கழித்து வருகிறது.

ஜனநாயக விரோதம்
அமைச்சரவைக் கூட்டத்தில், "மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்" என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருக்கிறது. நேற்றைய தினம் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் - அது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைத் தகர்க்கும் ஜனநாயக விரோத முடிவாகும்.

வலியுறுத்தல்
ஆகவே அமைச்சரவைக் கூட்டத்தில் "மறைமுகத் தேர்தல்" குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications