வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு... அவல் அள்ளி போடவேண்டாம்... ஸ்டாலின் கடிதம்
சென்னை: வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் அள்ளிப் போடாமல் திமுக தொண்டர்கள் களப்பணியை தொடங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறிகளாகவும் மாற்றுகின்ற வலிமை திமுகவுக்கு உள்ளதாக பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

செப்டம்பர் மாதம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9. கழகத் தோழர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்புமும் ஊக்கமும் தரும் மாதம் தான். செப்டம்பர் 15 - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். செப்டம்பர் 17 - ‘பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், நம் கழகமும் பிறந்தநாள்! எனவே, முப்பெரும் விழாவாக அதனை நாம் கொண்டாடி மகிழ்வது வழக்கம். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்றைய செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.

ஆச்சரியக்குறி
கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறிகளாகவும் மாற்றுகின்ற வலிமை, எளிய மக்களின் இனிய இயக்கமான தி.மு.கழகத்திற்கு உண்டு என்பதை, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். காணொலி வாயிலான பொதுக்குழுவும் அப்படிப்பட்டதுதான்.

தொண்டர்கள் சந்திப்பு
கழகத்தின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, மாவட்ட மாநாடுகள் வரிசையாக நடைபெறும். அதில் கிடைக்கின்ற ஊக்கமும் அனுபவமும் மாநில மாநாட்டைச் சிறப்பாக நிறைவேற்றிட உதவும். அப்படித்தான், இந்தக் கொரோனா நோய்த்தொற்றினால் உருவாகியுள்ள ஊரடங்குக் காலத்தில், ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகவே தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளான உங்களைச் சந்தித்து வந்தேன்.

அண்ணா அறிவாலயம்
வழக்கமான பொதுக்குழு என்றால், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் இடம்கொள்ளாத அளவுக்குக் கூட்டம் கூடி இருக்கும். ஆனால், நேற்றைய பொதுக்குழுவில் தனிமனித இடைவெளிக்கேற்ப நாற்காலிகள் போடப்பட்டு, மாநில அளவிலான நிர்வாகிகளும், சென்னை மாவட்டக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும்தான் கலந்துகொண்டனர். அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கலைஞர் அரங்கம் உருவானதுபோல, மிகச் சிறப்பான முறையிலே பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டம் நடைபெற்றது.

திமுகவினர் அனைவரும்
ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்வுகளின்போது, பேரூர் கழக நிர்வாகிகளிடம் பேசிய வேளையில் தங்களையும் பொதுக்குழு உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர். அதனால், கழக அமைப்பின் சட்டதிட்டங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பேரூர் கழகச் செயலாளர்களும் இம்முறை பொதுக்குழு உறுப்பினர்களாகப் பங்கேற்றனர். அதுமட்டுமல்ல நேரலையாக ஒளிபரப்பானதால், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் முழுமையாகக் காணும் வாய்ப்பைப் பெற்ற முதல் பொதுக்குழு என்ற சிறப்பும் சேர்ந்தது.

நேர்த்தியாக
தொழில்நுட்பத் தடங்கலின்றி - நேர்த்தியாக - ஒவ்வொருவரின் கருத்துகளும் தெளிவாகக் கேட்கும் வகையில் வெற்றிகரமாக இதனை நடத்திக் கொடுத்து, இந்திய அரசியலில் புதிய தடம் பதிக்கச் செய்து இதுவரை யாரும் கண்டிராத புதுமையைச் சாத்தியப்படுத்திய அத்தனைப் பேருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கழகத்தின் தொடக்கக்கட்டத்தில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் திண்ணையில் தொடங்கிய பொதுக்குழு, உலகம் வியக்கும் வகையில் திட்பம் வாய்ந்த இணைய வழியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

7 மாதங்களில்
அடுத்து அமையவிருப்பது தி.மு.கழக அரசுதான் என்ற மக்கள் மனதில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட சூளுரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் கழக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை.












Click it and Unblock the Notifications