செம பிளான்.. அண்ணாமலை "ஸ்கெட்ச்" திருச்சி சூர்யாவிற்கு இல்லை.. கேசவ விநாயகத்திற்கு.. ராஜிவ் கணிப்பு
சென்னை: திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கும் சூழலில், இதன் பின்னணி குறித்து திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி பரபரப்பு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவரான டெய்சிக்கும் பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரான சூர்யா சிவாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
அதில், பேசிய சூர்யா சிவா, டெய்சியை கொச்சையான வார்த்தைகளில் வசைபாடி கொலை மிரட்டல் விடுத்தார். இது பாஜகவுக்கு உள்ளேயும் வெளியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
உறவை முறிச்சிக்கிறேன்! அண்ணாமலை தந்த 2 ஆப்ஷன்கள்.. உதறிய திருச்சி சூர்யா.. யார் இந்த கேசவ விநாயகம்?
பரபரப்பு ஆடியோ
அந்த ஆடியோவில் சூர்யா சிவா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோரையும் சுட்டிக்காட்டியது விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த ஆடியோ வெளியாகி பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
காயத்ரி ரகுராம்
குறிப்பாக பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் இந்த ஆடியோ தொடர்பாக திருச்சி சூர்யாவை கடுமையாக விமர்சித்ததுடன் அவருக்கு பதவி வழங்கியதையும் குற்றம்சாட்டி இருந்தார். "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலை
இதை சூர்யா சிவா மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலம் நீக்கப்படுவதாக அறிவித்தார் அண்ணாமலை. அத்துடன், சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என உத்தரவிட்டார்.
தம்பி மாதிரி
இதையடுத்து பாஜக தலைமை டெய்சியையும் சூர்யா சிவாவையும் ஒன்றாக அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து திருச்சி சூர்யாவும் டெய்சியும் சமாதானத்துக்கு சம்மதித்தனர். அதன் தொடர்ச்சியாக இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய டெய்சி "சூர்யா சிவா எனக்கு தம்பியை போன்றவர். எங்களுக்கு இடையே அக்கா - தம்பி போன்ற உறவு இருக்கிறது." என்றார். இதன் தொடர்ச்சியாக சூர்யா சிவாவை 6 மாதம் கட்சியில் இருந்து அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.
திருச்சி சூர்யா ராஜினாமா
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திருச்சி சூர்யா, "அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.
கேசவ விநாயகம் மீது புகார்
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
திமுக ராஜீவ் காந்தி
இந்த நிலையில் கேசவ விநாயகத்துக்கு எதிராக திருச்சி சூர்யாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தியதாக திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "கேசவ விநாயகத்தின் கதையை முடிக்க திருச்சி சூர்யாவை பயன்படுத்தும் அண்ணாமலை! Next wicket யாரு?" என்று பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷை டேக் செய்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.