ராமநாதபுரம் திமுக நிர்வாகி டிஸ்மிஸ்.. ரூ.70 கோடி போதைப்பொருள் கடத்தலில் சிக்கியதால் உத்தரவு
சென்னை: சென்னையில் இருந்து இலங்கை வழியாக ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று திமுக நிர்வாகி இப்ராஹிம் உள்பட 3 பேரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தான் இப்ராஹிமை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் உஷாராகி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சென்னை கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு பைசூல் ரஹ்மான் என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.70 கோடியாகும்.
இதையடுத்து பைசூல் ரஹ்மானிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். அப்போது சில முக்கிய தகவல்களை பெற்ற அதிகாரிகள் மேலும் 2 பேரை கைது செய்தனர். மன்சூர், இப்ராஹிம் ஆகியோர் சிக்கினர். என மொத்தம் 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் கைதான இப்ராஹிம் என்பவர் திமுக நிர்வாகி ஆவார். இவர் ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இப்ராஹிமை கைது செய்துள்ளதால் திமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். ஏற்கனவே திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தற்போது இப்ராஹிம் சிக்கி உள்ளதாக அண்ணாமலை விளாசினார்.
இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் இப்ராஹிம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார். அதில் இப்ராஹிம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டபோதும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications