பிரிவினையை வளர்த்தது மனு சாஸ்திரமா? திராவிடமா? தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு திமுகவின் முரசொலி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன என பேசியுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. சூத்திரர்கள், பஞ்சமர்களை மட்டுமல்ல; பெண்களுக்கு ஏற்படுத்திய தீமையும், கொடுமையும் குறைவா? பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாகாது, பெண்தான் அனைத்துத் தீமைக்கும் அடிப்படைக்காரணம் என்று சொல்லி 'மனு'வை விட பிரிவினைவாதி வேறு வேண்டுமா? என முரசொலியின் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

முரசொலி நாளிதழின் இன்றைய தலையங்கம்: 'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன' என்று புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.இரவி!

DMK replies to Tamil Nadu Governor RN Ravi on Dravidian Ideology

ஜாதி என்ற கருத்தியலை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி, உற்பத்தி சக்திகளான பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தியது யார் என்பதை ஆளுநர்தான் விளக்கவேண்டும். 'மனித இனத்தை ஒடுக்குவதற்கும், அடிமைப்படுத்துவதற்கும் வகுத்த பேய்த்தனமான புனைவுத் திட்டம்தான் பார்ப்பனீயம்' என்று எழுதினார் அண்ணல் அம்பேத்கர்.

இந்த புனைவுத் திட்டமானது மக்களை ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிக் கொள்ள உட்சாதிகளை உருவாக்கியது. நான் வேறு - நீ வேறு என்ற வேற்றுமையை மட்டுமல்ல, நான் உயர்வு - நீ தாழ்வு என்ற வேற்றுமையை விதைத்தது. இதுதான் இந்திய சமூகத்தில் நடத்தப்பட்ட முதல் பிரிவினை. பல நூறு ஆண்டுப் பிரிவினை ஆகும்.

இந்த நுட்பத்தை அண்ணல் அம்பேத்கர் தொடர்ச்சியாக விளக்கி வந்தார். சாதியமைப்பின் தனியியல்பை அவர் மிகச் சரியாக விளக்கினார். ''சாதியமைப்பு என்பது தரப்படுத்தப்பட்ட சமமின்மையைக் கொண்டது. இதில் சாதிகள் ஏறுவரிசையில் மரியாதை பெறுவதாகவும், இறங்கு வரிசையில் அவமரியாதைக்கு ஆளாவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன" என்று சொன்னார் அம்பேத்கர் அவர்கள். எளிய மக்களுக்கு புரியும் வகையில் இதனை தந்தை பெரியார் அவர்கள், ''ஜாதியைக் கூட ஒழித்துவிடலாம் ஜாதிப் பெருமையை ஒழிக்க முடியாது" என்று சொன்னார்.

'சாதி என்பது படுக்கை மட்டமாக இல்லை, செங்குத்தாக இருக்கிறது, அந்த தன்மையில்தான் அது உயிர்வாழ்கிறது' என்றார் அம்பேத்கர். இந்தப் பிரிவினையை உருவாக்கியது யார்? வளர்த்தது யார்? இன்னமும் சனாதனம், வர்ணாசிரமம், கடந்த காலம், வேதக் காலம் என்று பெருமை பொங்க பேசி பிரிவினையை வளர்ப்பது யார்? திராவிடமா வளர்க்கிறது?

DMK replies to Tamil Nadu Governor RN Ravi on Dravidian Ideology

சூத்திரர்கள், பஞ்சமர்களை மட்டுமல்ல; பெண்களுக்கு ஏற்படுத்திய தீமையும், கொடுமையும் குறைவா? பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாகாது, பெண்தான் அனைத்துத் தீமைக்கும் அடிப்படைக்காரணம் என்று சொல்லி 'மனு'வை விட பிரிவினைவாதி வேறு வேண்டுமா? பெண்களை இழிவுபடுத்திச் சொல்லப்பட்ட மனுவின் வரிகள், இன்று வாயால் உச்சரிக்கத்தகுந்தவை அல்ல. தொட்டில் முதல் கல்லறை வரை ஆண் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் பெண் என்பதுதானே மனுவின் பிரிவினை? இதனை உயர் வகுப்பு பெண்களே இன்று ஒப்புக் கொள்ள மாட்டார்களே?

இப்படி எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்னால் கேள்வி எழுப்பியவர்கள் விரல் விட்டு எண்ணத் தக்கவர்களே! அத்திப்பாக்கம் வேங்கடப்பர், அயோத்திதாசப் பண்டிதர்- என்ற ஒருசிலரே! இதனை அமைப்பாகத் திரட்டிக் கேட்டது நீதிக்கட்சி. இதனை மக்கள் வாயில் இருந்து சொல்ல வைத்தவர் தந்தை பெரியார். இத்தகைய மக்களுக்கு உரிமையை சட்ட அங்கீகாரமாக பெற்றுத் தந்தவர்கள் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும்.

அந்த உரிமைக் கோட்டையின் இன்றைய காவல் அரண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதனால்தான் இவர்களுக்கு திராவிட இயக்கங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இது ஆளுநர் ரவி என்ற தனி மனிதரின் கோபம் அல்ல. பாரம்பரியக் கோபம். தனது முன்னோர்களின் கோபத்தை பிரதிபலிக்க வந்திருக்கிறார்.

தினந்தோறும் திராவிடம் பேசுபவர் நம்மை விட, அவர்தான். 'திராவிடம்' இல்லாமல் அவர் பேசுவது இல்லை. இது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. 'திராவிடம் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றுகிறோமாம்! திராவிடம் என்பது ஏமாற்றுச் சொல் அல்ல, விழிப்புணர்வுச் சொல்! திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒற்றைப் பொருள் தரும் இரட்டைச் சொற்கள்தான்.

'திராவிடன்' என்று சொல்வது ஏன் என்ற இந்த விவாதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் 'மர மண்டைகளுக்கு மீண்டும் கூறுகிறோம்' என்ற தலையங்கத்தை தந்தை பெரியார் தீட்டினார்.

''திராவிடம் என்ற சொல்லை விடக்கூடாது என்று சொல்லி வருகிறோம். திராவிடன் என்ற சொல்லுக்கு அஞ்சுவது போல் தமிழன் என்ற சொல்லுக்கு அவன் அஞ்சுவதில்லை" ( விடுதலை 22.11.1958) என்று எழுதினார். நாமும் திராவிடன் என்ற சொல்லை விடக் கூடாது என்பதையே ஆளுநர் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.

தமிழினத்தின் உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமான 'திராவிட மாடல்' தத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சியியல் தத்துவமாகச் சொல்லி இருக்கிறார்கள். ''சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

DMK replies to Tamil Nadu Governor RN Ravi on Dravidian Ideology

எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!" என்று முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இத்தகைய 'திராவிட மாடல்' வளர்ச்சியின் மீதான கோபத்தைத்தான் ஆளுநரின் பேசுக்கள் வெளிப்படுத்துகிறது. இப்படி எத்தனையோ பேரின் எதிர்ப்பில் வளர்ந்ததுதான் திராவிட இயக்கம்! இவ்வாறு திமுகவின் முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+