திமுக ஆட்சி குடும்ப ஆட்சிதான்.. குடும்பத்தை கைதூக்கி விடும் ஆட்சி.. பிரதமர் மோடிக்கு முதல்வர் பதிலடி
சென்னை: திமுக குடும்ப ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கி விடும் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவும் காங்கிரஸ் கட்சியும் குடும்ப ஆட்சி நடத்துவதாக குற்றம் சாட்டினார். தங்களின் குடும்பத்திற்காகவே ஆட்சி நடத்துவதாகவும் திட்டங்கள் தீட்டி கொள்ளையடிப்பதாகவும் தெரிவித்த மோடி, ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணத்தை அவர்களிடம் இருந்து பறித்து மக்களுக்கு நேரடியாக கொடுப்போம் என்றார்.

மக்கள் பணம் தற்போது மக்களுக்காக நேரடியாக சென்று சேர்கிறது. இதனால் ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார் மோடி. இதற்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது நமது திராவிட மாடல் அரசு. எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது!
ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் -இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்!
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!" என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன்.
அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், "நீங்கள் நலமா?" என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்.
அதேசமயம், மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்குத் வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?
மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு.
உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம்! திராவிட மாடல் அரசின் நலம்! தாய்த்திருத் தமிழ்நாட்டின் நலம்! அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். இந்த 'நீங்கள் நலமா' உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications