4 ஓட்டுதான் விழும் அண்ணாத்த.. சீமானை கலாய்த்த "முன்னாள் தம்பி" ராஜீவ் காந்தி!
சென்னை: அரசு பங்களாவில் தங்குவதற்கு தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றும், சொந்த ஊரான அரணையூர் வார்டிலேயே 4 வாக்குகள்தான் விழும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுக நிர்வாகி ராஜிவ் காந்தி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அக்கட்சினர் திராவிட மாடல் அரசின் சாதனைகள் என பட்டியலிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓராண்டுகால திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

கரண்ட் இல்லப்பா - சீமான்
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு நேற்று ட்விட்டரில் அதிகளவில் டிரெண்டானது. "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என அவர் தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை பிரச்சனையை சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.

அண்ணனின் பங்களாவில் கரண்ட் இல்லயா?
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே' மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்." எனக் குறிப்பிட்டு இருந்தார்.

குடிசையில தங்க அனுமதி தாங்க - சீமான்
இதற்கு மீண்டும் ட்விட்டரில் பதிலளித்த சீமான், "மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!" என தெரிவித்து இருந்தார்.

4 ஓட்டு தான் விழும் - ராஜிவ் காந்தி
சீமானின் இந்த ட்வீட்டுக்கு, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், தி.மு.கவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார். அதில், "மின்சாரத்துறை அமைச்சர் தங்கி இருப்பது அரசு பங்களா அதில் தங்க வேண்டும் என்றால் தேர்தலில் ஜெயிக்க.. ஜெயிக்க..ஜெயிக்க வேண்டுமே..நமக்கு தான் சொந்த ஊர் அரனையூர் வார்டிலயே 4 வாக்கு தான் விழும் என்ன செய்யலாம் சீமான் அண்ணாதே..." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

விருந்தினராக வாங்க! - செந்தில் பாலாஜி
சீமானின் இக்கருத்துக்கு மீண்டும் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், "குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications