எடப்பாடி அண்ட் கோ-வில் திமுகவின் “ஸ்லீப்பர் செல்கள்”? தனித்துவிடப்பட்டாரா ஈபிஎஸ் -ஓயாத ஆடியோ சர்ச்சை
சென்னை: பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டிருப்பது, திமுக - அதிமுக நிர்வாகிகள் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
Recommended Video
அதிமுக கட்சியினரின் பெரும் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக மூத்த தலைவரான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் இந்த ஆடியோவில் பொன்னையன் பேசியிருக்கும் சில முக்கிய ரகசியங்கள்தான்.
எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகிய இருவருக்கு திமுக உடனான தொடர்பு குறித்து ஆடியோவில் பேசியது பேரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய 2 கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கட்சி தலைவர்களுக்குள் ஒரு சமரசம் இருக்கும் என்று பரவலாகவே ஒரு விமர்சனம் உள்ளது. இந்த சந்தேகத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே அந்த ஆடியோவில் சில விஷயங்கள் உள்ளன.

கோலப்பன் வெளியிட்ட ஆடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் என்பவரிடம் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவில், அதிமுகவின் தொண்டர்கள் இரட்டைஇலை சின்னத்துக்கு பின்னால்தான் இருக்கிறார்கள். அதிமுகவின் தலைவர்கள் பணத்துக்கு பின்னால் நிற்கிறார்கள் என்றும் பேசியுள்ளார். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள ஸ்டாலினிடம் ஓடினார் என்றும், கேபி முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டதாக அதில் பேசப்பட்டு உள்ளது.

பொன்னையன் மறுப்பு
பொன்னையன் அந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனா கே.எஸ்.கோலப்பனோ பொன்னையன் தான் என்னிடம் பேசினார் என்று சொன்னதுடன் எத்தனை மணிக்கு எவ்வளவு நிமிசம் பேசினார் என்பதற்கும் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார். இது ஒருபக்கம் இருந்தாலும் இந்த ஆடியோல பேசப்பட்டிருக்கும் விஷயங்களை பார்த்தால், "கே.பி முனுசாமி திமுக அமைச்சர் துரைமுருகன் ஆதரவோடு குவாரி தொழில் செய்வதாகவும், மாதம் அவருக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிமுகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கட்சியின் அனைத்து தலைவர்களும் எடப்பாடி பின்னால் நிற்பதைபோன்ற தோற்றம் நடந்து முடிந்த பொதுக்குழு மேடையை பார்க்கையில் தெரிந்தது. ஓ பன்னீர்செல்வம் திமுகவை விமர்சிக்காமல் சுயநலமாக செயல்படுகிறார் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. அதையே எடப்பாடி தரப்பும் மீண்டும் மீண்டும் கூறி வந்தது.

தங்கமணி, முனுசாமி
ஆனால், தற்போது அந்த ஆடியோவில் பேசப்பட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டால் எடப்பாடி தரப்பில் இருக்கும் முக்கிய தலைவர்களான தங்கமணியும் கே.பி. முனுசாமியும் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பெரும் ஆதரவோடு கட்சிக்குள் ஒற்றை தலைமையாக ஈபிஎஸ் உருவெடுத்துள்ள இந்த நேரத்தில, அவருடன் இருக்கும் தலைவர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக ஆடியோவில் சொல்லிருப்பது ஈபிஎஸ்சுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தனித்துவிடப்பட்டாரா எடப்பாடி?
அந்த ஆடியோவை கேட்கையில் ஈபிஎஸுடன் தோலோடு தோல் நிற்கும் பல அதிமுக தலைவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நலனுக்காக திமுகவை விமர்சிக்காமல் திமுகவினரோடு தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இதையெல்லாம் பாக்கும்போது ஈபிஎஸ்சிற்கு கட்சிக்குள் இருக்கும் ஆதரவும் கேள்விக்குறியாக உள்ளது. அத்துடன் திமுகவை எதிர்ப்பதில் சொந்த கட்சியினரே எடப்பாடிய தனியாக விட்டுவிட்டார்களே என்ற சந்தேகமும் வருகிறது.












Click it and Unblock the Notifications