அண்ணாமலையை முந்துவதற்காக.. தமிழக பிரிவினை பேசிய நயினார் நாகேந்திரன்! விளாசும் திமுக ராஜீவ் காந்தி
சென்னை: விளம்பரம் தேடிக் கொள்வதில் அண்ணாமலையுடன் போட்டி போடும் விதமாக நயினார் நாகேந்திரன் கூறும் கருத்துக்களை பொருட்படுத்த தேவையில்லை எனக் கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி.
4.எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை பிரிப்போம் என்று நயினார் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று அவரை கலாய்த்துள்ளார்.
தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பற்றி திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;
இரண்டாக பிரியும் தமிழ்நாடு? உதயமாவது வட தமிழ்நாடு? கொங்குநாடு? நயினார் பற்றவைத்த வெடியால் பரபரப்பு
விளம்பரம் தேடுவதில்
''தமிழகத்தை மற்ற எந்த மாநிலங்களோடும் யாரும் ஒப்பிட முடியாது. ஏனெனில் பல்வேறு சிறப்புகளையும் தனித்துவத்தையும் கொண்டது இந்த தமிழ் மண். தமிழகத்தை பற்றியோ தமிழர்களை பற்றியோ எந்தவித வரலாறும் தெரியாத நயினார் நாகேந்திரன் போகிற போக்கில் தமிழ்நாட்டை 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். எனக்கென்னவோ அவர் விளம்பரம் தேடுவதில் அண்ணாமலையுடன் போட்டி போட்டு இப்படி பேசுகிறார் என நினைக்கிறேன்.''
4 எம்.எல்.ஏ.க்கள்
''தமிழகத்தில் 4 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு நயினார் இப்படி ஆசைப்படுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், அவர் ஆசைப்படி நடந்தாலும் கூட தமிழகத்தில் காவி கொடி பறக்க வாய்ப்பே இல்லை. மக்கள் மத்தியில் விஷ விதையை தூவ முயற்சிக்கும் பாஜக இதில் தோல்வி அடையும். தமிழகத்தை 2 ஆக பிரிக்கக் கோரி போராடினால் அதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.''
தேவையற்ற பேச்சு
''ஆந்திரா தெலுங்கானா விவகாரம் வேறு தமிழ்நாடு வேறு. அதனால் அந்த மாநிலங்களோடு தமிழகத்தை நயினார் நாகேந்திரன் ஒப்பிட்டுப் பார்த்தார் என்றால் அது அவருக்கு ஏமாற்றத்தை தான் அளிக்கும். திராவிடமும், பொதுவுடைமையும் தான் தமிழகத்தில் தனது கொடியை பறக்க விட முடியும். நயினார் நாகேந்திரன் தேவையற்ற பேச்சை பேசி சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் அண்ணாமலைக்கு போட்டியாக ஊடகங்களில் விளம்பரம் தேட விரும்புகிறார் என நினைக்கிறேன்.'' இவ்வாறு திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி தனது கருத்தை பகிர்ந்தார்.
நிர்வாக காரணங்கள்
தமிழகத்தை நிர்வாக காரணங்களுக்காக 2 மாநிலங்களாக பிரிக்கலாம் என நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நயினார் நாகேந்திரன் பேசிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.