தமிழக கல்வி வளர்ச்சியை தடுக்க நிதி மறுப்பு- மத்திய பா.ஜ.க. அரசுக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனம்!
சென்னை: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய நிதியை விரைவாக வழங்க வேண்டும் எனவும் திமுக மாணவர் அணி வலியுறுத்தி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இந்திய அளவில் கல்வித் துறையில் பல்வேறு குறியீடுகளில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருப்பதை நாடறியும். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு உரிமை உடையதாய் மாற்றும் மாபெரும் கல்வி புரட்சியை ஏற்படுதியது நீதிகட்சி ஆட்சி காலம். அதனை தொடர்ந்து வந்த சில ஆட்சியாளர்கள் பல்லாயிரகணக்கான பள்ளிகளை மூடிய கொடுங்கோன்மை நடந்தேறியது. பின்னர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பெருந்தலைவர் காமராசர் மூடப்பட்ட பல்லாயிரகணக்கான தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறந்து ஏழை எளியோருக்கும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ளோருக்கும் தொடக்கக் கல்வி கிடைக்க செய்யப்பட்டது. இருப்பினும், இந்தி திணிப்பின் இறுக்கங்கள் இருந்து கொண்டே இருந்தது.

அண்ணா, கருணாநிதி ஆட்சியில்: பேரறிஞர் அண்ணா ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின், தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்கும் என்று சட்டமாக்கினார். தமிழ் மொழி கல்வி மேலோங்கியது. உலக கல்வி ஆங்கில வழியில் பெற முடிந்தது. கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற பின் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்கள் தொடக்க பள்ளியில் இருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி என்று கல்வியின் தரம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. பள்ளி படிப்போடு நின்று விடாமல், உயர்கல்வி பெற வேண்டுமென்று கருணாநிதியால் நிறுவபபட்ட கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஏராளம்! ஏராளம்!
சமச்சீர் கல்வ்வி: குறிப்பாக ஒரு மாநிலத்திலுள்ள மாணவர்கள் அனைவரும் பயிலக்கூடிய வகையில், ஒரே சீரான, சமநிலை, சமவாய்ப்பு கொண்டதாய் விளங்கிட சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார். 1996-ஆம் ஆண்டே பள்ளிகளில் கணினியை அறிமுகப்படுத்தப்பட்டது.
இல்லம் தேடி கல்வி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பள்ளி பயிலும் மழலையருக்கு காலை சிற்றுண்டி எனவும், கிராமப்புறத்தில் ஏழை, எளியோர் பயிலும் அரசுப் பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், மாணவர் திறன் வளர்க்கும், வினாடிவினா, கலைத்திருவிழா, முதலமைச்சரின் விளையாட்டு போட்டி, இந்திய அளவிலான சுற்றுலா, வெளிநாட்டு சுற்றுலா என தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியை இந்திய அளவில் அல்லாமல் உலக அளவில் உயர்த்தி பிடிக்கும் மண்ணாக தமிழ்நாடு விளங்குகிறது.
தேசிய கல்விக் கொள்கை: இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது, சமூகநீதி-சமத்துவம்-சமவாய்ப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய மாநில அரசின் உரிமைகளுக்கும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கும் எதிரானது. அறிவியல் பூர்வமான கல்வி முறைக்கு மாறாக பழைமைவாதத்திற்கு உரியதாக உள்ளது.
3-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு: மூன்று-ஐந்து-எட்டு ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவந்து, மாணவர்கள் பள்ளி படிப்பை நிறைவு செய்ய முடியாத வகையில் இடைநிற்றலை உருவாக்கி அனைவருக்கும் கல்வி வழங்கும் வாய்ப்பை சிதைக்கும் வகையில் உள்ளது போன்ற பலவேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
கட்டாய நுழைவுத் தேர்வு எதிர்ப்பு: மேலும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளை சிதைத்து விட்டு, அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கும் முறைகளை கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்றும், தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நிதி தர மறுப்பு: மத்திய பா.ஜ.க. அரசு தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், மத்திய அரசின் 'சமக்ர சிக்ஷா அபியான்' (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க மறுக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியாவின் கல்வித் துறையில் முதல் மாநிலமாய் விளங்கும் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னோடி திட்டங்களை முடக்கி விட வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்தில் நியாயமாக வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கும் பா.ஜ.க. அரசின் இச்செயல்பாடு மிக கண்டனத்திற்குரியது.எனவே, மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய நிதியை விரைவாக வழங்கிட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications