கேஸ், பெட்ரோல் விலை வட இந்தியர்களை பாதிப்பதில்லை.. அதனால்தான் பாஜக ஜெயிக்கிறது! இப்படி ஒரு தியேரி
சென்னை: கேஸ், பெட்ரோல் விலை வட இந்தியர்களை பாதிப்பதில்லை அதனால் தான் பாஜக ஜெயிக்கிறது என திமுக ஆதரவு சமூக வலைதளவாசிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற போது வேதாளன் என்பவர் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவு நேற்று முதல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், இந்தப் பதிவை திமுக ஆதரவாளர்கள் ரீ டிவிட் செய்து வருகிறார்கள். இதனிடையே வேதாளன் என்பவர் எழுதிய அந்தப் பதிவில் அப்படி என்னதான் உள்ளது என்ற விவரம் பின்வருமாறு;

*பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், முக்கால்வாசி மக்களிடம் வண்டியே இல்லை.
*கேஸ் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், முக்கால்வாசி மக்கள் விறகு/மாட்டுச்சாண வறட்டி வைத்து சமைக்கிறார்கள்.
*வேலையில்லா திண்டாட்டம் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில் முக்கால்வாசி மக்கள் வெளிமாநிலங்களில் குறைந்த கூலியில் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
*கொரோனா பரவல் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், அங்கே கொரோனா சிகிச்சை பெற்று குணமடைய தரமான மருத்துவமனைகளே கிடையாது.
*GST வரி எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், குட்கா, பான்மசாலா, பீடா போன்ற போதைப் பொருட்கள் விலை ஏறாமல் அதே விலைக்கு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கிடைக்கிறதே.
*உயர்தர அரசு மருத்துவமனைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இல்லாதது எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் செமி ஃபைனலாக பார்க்கப்பட்ட ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் ஃபைனல் மேட்சான 2024 பொதுத் தேர்தலிலும் தாங்கள் தான் வெற்றிபெறுவோம் என பாஜகவினர் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
இவ்வாறு திமுக ஆதரவாளர்கள் பதிவிட்டு வந்தாலும், வட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது இதே லாஜிக்கை ஏன் சொல்லவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் பதில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications