ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி..திமுக கையில் ‘2016’ ப்ளான்! ஆட்டம் காணும் அதிமுக கூடாரம்!
சென்னை: மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜ் உள்ளிட்ட அதிமுக புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவுக்கு தாவி வரும் நிலையில் உற்சாகமடைந்துள்ளது திமுக தலைமை. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேமுதிக, மதிமுக புள்ளிகளை திமுகவுக்கு வரவழைத்தது போல, தற்போது அதிமுக புள்ளிகளை வளைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக கொங்கு, டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலைகளை திமுக துவக்கிவிட்டது என்றே சொல்லலாம். அதாவது 2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளிலேயே 2026 தேர்தலை ஒட்டி தேர்தல் குழுவை அமைத்தது திமுக.
கேஎன் நேரு தலைமையிலான இந்த குழுவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். திமுகவுக்கு இந்த முறை வேலைகள் சற்று குறைவு என்றே சொல்லலாம். கடந்த தேர்தல்களைப் போல கடைசி நேரத்தில் கூட்டணி குறித்து பேச வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை.

திமுக தேர்தல் திட்டம்
காரணம் ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை மட்டும் தான் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் அதிமுக திமுகவை எதிர்க்க தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை என்பதால் அதிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. பாஜக மட்டுமே தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து இருக்கும் நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில் அதனை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல்வர் வேட்பாளர் தான் தான் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விஜய் தலைமையை ஏற்று புதிய கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுக உட்கட்சி விவகாரங்களால் சிக்கித் தவிக்கும் நிலையில் அதிமுகவை மேலும் பலம் இழக்க செய்ய திமுக தயாராகி வருகிறது.
திமுக வலை
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் வேலைகளை தொடங்கிவிட்டது என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி இருக்கின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் பொறுப்பு சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்களுக்கு திமுக தரப்பால் வழங்கப்பட்டிருக்கிறது.
திமுக அமைச்சர்கள்
திமுகவுக்கு வந்தால் 2026 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சியில் உரிய பதவி, தேவைப்பட்டால் அமைச்சரவையிலும் வாய்ப்பு தரப்படும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
2016 சட்டமன்ற தேர்தல்
2016 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தரப்புக்கு செல்லலாம் என கருதப்பட்ட தேமுதிக, மதிமுகவை பலம் இழக்க செய்யும் வகையில் அங்கிருந்த எம்எல்ஏக்கள் முக்கிய நிர்வாகிகளை திமுக வளைத்துப் போட்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அதே பாணியை திமுக கையில் எடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications