ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை.. சட்டசபையில் திமுக, காங். வெளிநடப்பு
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்காத தமிழக அரசை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சட்டசபையில் இன்று வெளிநடப்பு செய்தன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதுகுறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பும்போது, பதிலளித்த அமைச்சர் தங்கமணி ,உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
ஆனால் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, திமுக வெளிநடப்பு செய்தது. சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி இருந்தது.
அவ்வாறு செய்யாத நிலையில் மீண்டும் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்காத, தமிழக அரசை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்து உள்ளது, என்று தெரிவித்தார். இதனிடையே, இதே கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பின்னர், வெளிநடப்பு செய்தனர்.