ராஜ்யசபா சீட் பற்றி பேச இது நேரமல்ல! கூட்டணிக் கட்சிகளிடம் கட் அண்ட் ரைட்டாக திமுக!
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ள திமுக, ராஜ்யசபா சீட் பற்றி இப்போதைக்கு பேசவே வேண்டாம் என கட் அண்ட் ரைட்டாக கூறி வருகிறது.
இப்போது மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்படிக்கை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் மாநிலங்களவை சீட் பற்றி பேச இது நேரமல்ல எனவும் திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு ஓபனாக சொல்லி விடுகிறாராம். இதனால் மாநிலங்களவை சீட் எதிர்பார்க்கும் காங்கிரஸ், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடும் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மேற்கொண்டு இந்த கூட்டணியில் புதிதாக ஒன்றிரண்டு அரசியல் கட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மனக் கசப்பில்லாமல் பேசி முடிக்க திமுக தலைமை விரும்புகிறது. இதற்காக டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, ஆகிய 6 பேர் கொண்ட டீமை களமிறக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் நேருவை பொறுத்தவரை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நெளிவு சுளிவு அறிந்து பதமாக பேசக்கூடியவர். ஆனால் அதற்கு நேர்மாறானவர் டி.ஆர்.பாலு. மனதில் தோன்றியதை பட்டென ஒளிவு மறைவின்றி போட்டுடைத்துவிடுவார்.
அதேபோல் ஐ.பெரியசாமி சற்று பொறுமையானவர், நிதானமானவர். இப்படி திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள 6 பேரும் 6 குணாதிசயங்களை கொண்டவர்கள். காங்கிரஸ், மதிமுக மட்டுமே வழக்கமாக மாநிலங்களவை சீட் கேட்கும். கடந்த தேர்தலில் கூட அப்படித்தான் அந்த 2 கட்சிகளும் கேட்டு பெற்றன. வைகோவும், ப.சிதம்பரமும் திமுக கோட்டாவில் ராஜ்யசபா எம்.பி.யானார்கள்.
இந்நிலையில் வரும் தேர்தலிலும் காங்கிரஸ், மதிமுக தலா ஒரு ராஜ்யசபா சீட் எதிர்பார்க்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் இந்த முறை ராமநாதபுரம் தொகுதியுடன் சேர்த்து ஒரு மாநிலங்களவை சீட் எதிர்பார்த்து அதை கேட்டது தான். இதற்காக நீண்ட நெடிய காயிதே மில்லத் கால ஃபிளாஷ்பேக் ஒன்றையும் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார் காதர் மொகிதீன். அவர் சொன்ன கதையை கேட்டுவிட்டு இப்போதைக்கு மக்களவை சீட் பற்றி பேசுவோம், மற்றதெல்லம் அப்புறம் பார்த்துக் கொள்வோம் என சூசகமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.











Click it and Unblock the Notifications