"கத்துகுட்டி என்கிறாரே ஜெயக்குமார்.." நிருபர் கேள்வி.. உதயநிதி ஸ்டாலின் பதில் என்ன தெரியுமா?
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து வாக்களித்தார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து 12,602 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி உள்ளது.
இவர்களை தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதலே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளிக்க துவக்கினர். இதனால் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.

மனைவியுடன் உதயநிதி
இந்நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கீர்த்திகாவுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். வரிசையில் நின்று ஓட்டளித்தார். இதேபோல் கீர்த்திகாவுடம் வாக்களித்தார். பின்னர் இருவரும் ஓட்டளித்ததன் அடையாளமாக அழியாமையிட்ட விரலை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விதிமீறலா
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தபோது அணிந்து வந்த சட்டையில் திமுக கொடியுடன், சூரியன் போன்ற அடையாளம் இருந்தது. இது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பான படத்தை சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள், விதிமீறிய உதயநிதி ஸ்டாலினை தேர்தல் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் ஜனநாயக கடமை
முன்னதாக சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி ஓட்டுச்சாவடியில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வந்து வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‛‛நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். உள்ளாட்சியே சிறு குடியரசு என காந்தி கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்பு மூலம் தான் அரசு திட்டங்கள் ஆற்ற முடியும். இதனை உணர்ந்து உரிமை உள்ளவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெறும்'' என கூறினார்.

மிகப்பெரிய வெற்றி
ஓட்டு போட்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலை விட திமுகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தேன். நல்ல வரவேற்பு உள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இதற்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள். மேற்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளதாக நம்புகிறேன். கோவையில் திமுக குறித்து குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் யாரும் கூறவில்லை. தோல்வி பயத்தில் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்'' எனக்கூறினார். இந்த வேளையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‛‛உங்களை கத்துக்குட்டி என்கிறாரே'' என்ற கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்ட உதயநிதி சிரித்தபடியே அங்கிருந்து சென்றார்.

தீவிர பிரசாரம்
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக, பாஜக கட்சிகளையும், முன்னாள் அமைச்சர்களையும் விமர்சனம் செய்தார். மேலும் தொண்டர்களின் கேள்விகளுக்கு கிண்டலாக பதிலளித்து சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் திமுக செயல்படுத்திய திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications