"அது என்னோட பிள்ளையார் இல்லைங்க.. என்னோட அம்மாவோட சிலை".. பற்றிய தீயை அணைத்த உதயநிதி!
நடுராத்திரி பிள்ளையார் சிலையுடன் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு நடுராத்திரியில் வாழ்த்து சொல்லி இருந்தார்.. இது சம்பந்தமான ஒரு ட்வீட்டை அவர் போடவும், அது அரசியல் களத்தில் தீயாக பற்றி கொண்டு எரிந்த நிலையில், அதற்குரிய விளக்கத்தை உதயநிதியே தற்போது தந்துள்ளார். ட்விட்டரில் போட்டது தன் அம்மாவின் சிலை என்று தெரிவித்துள்ளார்.
திமுகவை பொறுத்தவரை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முழக்கங்களை முன்வைத்துதான் அதன் ஆரம்ப கால அரசியல் நகர்ந்தது.
ஆனால், கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற சிறுபான்மையின மக்களின் விழாக்களுக்கு மட்டும் திமுக எப்போதுமே வாழ்த்து சொல்லி வரும்.. அதே சமயம் இந்துக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை என்ற நிலைப்பாட்டையும் அது கடைப்பிடித்து வருகிறது.

ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.. கடந்த 2014ம் வருடம் திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலின், திடீரென விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னார்.. ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே இந்த பதிவு போடப்பட்டிருந்தது.. "Greetings to all on the occasion of Vinayaka Chaturthi!" என்று ஸ்டாலின் பதிவிடவும், அது மிகபெரிய அதிர்வலையை அந்த சமயம் ஏற்படுத்தியது.. கோபாலபுரமே அதிர்ந்தது.

நீக்கம்
கலைஞர் கருணாநிதியும் இதனால் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. இதனால் அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டும் விட்டது. "இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஒரு மறுப்பும் உடனடியாக வெளியானது.

அதிருப்தி
அதுபோலவே இப்போதைய விநாயகர் சதுர்த்தியை முன்னிறுத்தி சில சலசலப்புகள் திமுகவில் ஏற்பட்டு வருகிறது.. இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்று திமுகவுக்கு எதிரான குரல்கள் சோஷியல் மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தன.

உதயநிதி
இந்நிலையில்தான், உதயநிதி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதாவது விநாயகர் சதுர்த்தி முடிந்தபிறகு, நடுராத்திரி இந்த ட்வீட்டை போட்டிருந்தார்.. அந்த ட்வீட் நேரம் மணி 1.54 என்று இருக்கிறது.. ஒரே ஒரு விநாயகர் சிலையை தன் நெஞ்சோடு அணைத்தபடி அந்த போட்டோ உள்ளது.. அந்த சிலை களி மண்ணால் செய்யப்பட்டது. இதற்கு எந்த கேப்ஷனும் அதில் இல்லை.

வாழ்த்தா?
இந்த போட்டோவை போட்டுவிட்டு இவர் என்ன சொல்ல வருகிறார் என்றும் தெரியாமல் இருந்தது.. இது வாழ்த்து என்று எடுத்து கொள்வதா? அல்லது சாதாரணமாக போட்டோவை போட்டார் என்று அர்த்தப்படுத்தி கொள்வதா என்றும் குழப்பமாக இருந்தது... ஆனால், மிகப்பெரிய அதிர்வலைகளை இந்த போட்டோ ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட வாழ்த்தாகவே ட்விட்டர்வாசிகள் இதை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. விமர்சித்தும் கமெண்ட்டுகளை போட்டு வந்தனர்.

எதிர்ப்பு
"திராவிட கொள்கைகளை நீர்த்து போக செய்யும் உதயநிதி மீது கழகம் நடவடிக்கை எடுக்குமா? என்றும், "திருப்பதிக்கு மொட்டை போட்டால் கூட இந்துக்கள் நம்ப மாட்டார்கள்" என்றும் இந்த ட்வீட்டுக்கு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

அரைவேக்காடுகள்
இதில், "இந்துக்கள் ஓட்டு வேணும் அதனால்" என்று ஒருவர் கமெண்ட் சொல்ல, "வாழ்த்து சொல்றதும், சொல்லாததும், சிலை வைத்து வணங்குறதும் வணங்காதது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று கூட தெரியாத அரசியல் அறிவு இல்லாத அரைவேக்காடுகள் இந்த பதிவில் வந்து ஓட்டுக்காகன்னு ஒப்பாரி வெக்கிறாங்க.. பக்தியெல்லாம் ஓட்டுக்காக தான் அப்படியே நம்மளையும் நினைச்சுட்டானுங்க போல" என்றும் பதிலடிகள் வந்து விழுகின்றன.

விளக்கம்
இப்படி உதயநிதி ட்விட்டர் பக்கத்தில் காரசார விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில்தான், உதயநிதி தற்போது ஒரு விளக்கத்தை இதுகுறித்து தந்துள்ளார்.. அதில், "எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ட்விட்டரில் போட்டது தன் அம்மாவின் விநாயகர் சிலை" என்று தெளிவுபடுத்தி உள்ளார் உதயநிதி. இதனால் இது குறித்த பரபரப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications