திமுககாரன் 2 பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்தில் நிற்பான்.. ஆனா நாம.. எஸ்பி வேலுமணி கொடுத்த வார்னிங்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் குறித்து எஸ்பி வேலுமணி பெருமையாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ஒரு பூத்தில் 2 பேர் மட்டுமே இருந்தாலும் கடைசி வரை அந்த வேலையை பார்ப்பார்கள் என்று கூறிய எஸ்பி வேலுமணி, அதிமுகவினர் வெற்றி நம்பிக்கையில் பணிகளில் சுறுசுறுப்பு காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. SIR பணிகளில் திமுகவினர் காட்டி வரும் வேகம் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது. திமுகவினர் மற்றும் தங்களின் கட்சிக்காரர்களின் வாக்குகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

அதிமுகவில் முதல் வாரத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் களத்திற்கு வரவில்லை என்றாலும், அடுத்தடுத்த வாரங்களில் அவர்களின் SIR பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி திமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் குறித்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அதில் எஸ்பி வேலுமணி பேசுகையில், திமுக கைகளில் அதிகாரம் வந்த பின் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டது. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை. அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. அதிக திட்டங்களையும் அதிமுகவே கொண்டு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகச்சிறப்பாக ஆட்சி நடைபெற்றது. 7.5% இடஒதுக்கீடு எல்லாம் யாராவது நினைத்து பார்க்க முடியுமா?
11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரான பின் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும். SIR எதிர்ப்பதாக கூறி திமுகக்காரன் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டே இருக்கிறான். எங்கள் மாவட்டத்தில் ஒரு நகரச் செயலாளர் குடும்பத்தில் 5 ஓட்டுக்கள் இல்லை.. திமுகவுக்கு மக்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு உள்ளது.
ஆனால் திமுககாரன் 2 பேர் மட்டும் இருந்தாலும் கூட, கடைசி வரை நின்று வேலை செய்கிறான். நாம் 50 பேர் இருப்போம்.. நிச்சயம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்து கொண்டிருப்போம். அதனால் நம்முடைய பணிகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். 2021ல் அதிமுக ஆட்சி அமைய வேண்டியது. வெறும் ஒன்றரை சதவிகித வாக்குகளில் தவறவிட்டுவிட்டோம்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்தபின், நமது குடும்பம் மற்றும் நமது கட்சிக்காரர் வாக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைப்பார். அரசு ஊழியர்கள் கூட அதிமுகவை எதிர்பார்க்கிறார்கள். திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்பதை மக்களும் அறிந்தே இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications