திமுக vs அதிமுக.. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது யாருக்கு பாதிப்பு?
சென்னை: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது யாருக்கு பாதிப்பு இருக்கும்.. திமுக மற்றும் அதிமுக இரு கூட்டணியில் எந்த கூட்டணிக்கு பாதிப்பு இருக்கும் என்பதை பார்ப்போம். பொதுவாக அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் செங்கோட்டையன். எனவே அவர் தவெகவில் இணைந்திருப்பது அதிமுகவிற்கு தான் பாதிப்பு என்று எல்லாராலுமே பார்க்கப்படுகிறது.. ஏன் திமுகவிற்கு பாதிப்பு இல்லை என்பதையும் பார்ப்போம்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலேயே எம்எல்ஏவாக இருந்தவர். கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல முறை செங்கோட்டையன் தான் எம்எல்ஏவாக இருந்தார். இப்போது வரை அவர் கோபி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தற்போது தவெகவில் இணைந்த காரணத்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது யாருக்கு பாதிப்பு இருக்கும் என்று தெளிவாக பார்த்தால், திமுகவிற்கு பாதிப்பு இல்லை.. அதிமுகவிற்கு தான் நேரடியாக பாதிப்பு.

திமுகவிற்கு ஏன் பாதிப்பு இல்லை என்றால், செங்கோட்டையன் போனது, திமுகவில் இருந்தோ அல்லது திமுக கூட்டணியில் இருந்தோ அவர் வெளியில் போகவில்லை.. அதுமட்டுமின்றி, செங்கோட்டையன் தவெக போனதால், திமுக எதிர்ப்பு வாக்குகள் இன்னும் சிதற தான் வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதற, சிதற, அது ஆளும் கட்சிக்குத்தான் பலம் ஆகும். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் திமுகவிற்கு நேரடியாக எந்த நஷ்டமும் இல்லை.. அதேநேரம் திமுகவில் போய் இணைந்திருந்தால் அது ஆளும் கட்சிக்கு பெரிய பலமாகவும் இருந்திருக்கும்..
அதேநேரம் அதிமுகவில் பார்த்தோம் என்றால், இவ்வளவு நாளாக அதிமுகவின் முகமாக செங்கோட்டையன் பார்க்கப்பட்டார். எட்டு முறை ஒரே தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். ஒன்பது முறை எம்எல்ஏவாக இருந்தவர். அமைச்சராகவும் இருந்தவர்.. கொங்கு மண்டல அரசியலில் முக்கிய முகங்களில் ஒருவராக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதே பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இப்போது அதிமுகவில் இருந்து நேரடியாக தவெக கூட்டணிக்கு போயிருக்கிறார் என்பது அதிமுகவிற்கு ஒருசரிவு என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
என்னதான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்து, செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினாலும், அதிமுகவின் ஓட்டு வங்கி யார் போனாலும் நிரந்தரமாக அப்படியே இருக்கும் என்று கூறினாலும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை பொறுத்தவரை தனிநபர் போனதால் பாதிப்பு இல்லை என்று சொன்னாலும், இப்படி ஒவ்வொரு தனி நபராக போக போக, அதுவும் கூட்டமாகவும், ஒரு குழுவாகவும் மாறப்போகிறது. அவர்களுக்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.
தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.. அப்படீன்ற எண்ணிக்கையில் நாம் பார்த்தோம் என்றால், தவெகவில் செங்கோட்டையன் சேரும் போது, 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இணைந்தார். என்னதான் பாதிப்பு இல்லை என்று அதிமுக கூறினாலும், ஏதாவது ஒரு வகையில் அதிமுகவிற்கு பாதிப்பு இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
மேலும் இது அதிமுகவிற்கு பலகீனமாக பார்க்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். மேலும் அதிமுகவிற்கு உள்ளேயும் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்ற குரல்கள் இருக்காத்தான் செய்கிறதும் என்றும், ஏற்கனவே சிலர் திமுகவிலும், தற்போது தவெகவிலும் சேர்ந்துள்ள நிலையில், இன்னும் சிலர் போய் தவெகவில் சேருவதற்கு வழிகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.. இது சாத்தியமா அல்லது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செங்கோட்டையனை பொறுத்தவரை ஒரு சிறந்த பிரச்சார வியூக நிபுணர்.. அதிமுகவில் பல ஆண்டுகளாக அமைப்புச் செயலாளராக இருந்தவர். அவரது நிர்வாக அனுபவம் தவெகவுக்கு கிடைப்பது, அதிமுக-வுக்குக் களம் அமைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும். தவெகவிற்கு பலமாகவும் பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் செங்கோட்டையனின் இந்த நகர்வு அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்குத்தான் பாதிப்பு என்றே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications