ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது?
சென்னை: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நாளை திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்திக்கு திமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் தரப்பில் இருந்த பாசிட்டிவான பதில் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு, நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த கூட்டணி உறுதியானது. இருப்பினும் கூட்டணி உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தமிழகம் வந்து பிரசாரம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட எந்த மேலிட தலைவர்களும் தமிழகம் வந்து பிரசாரம் செய்யவில்லை. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் தமிழகம் வந்து பிரசாரம் செய்தால் அது அந்த கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக அமையலாம்.
ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தற்போது வரை தமிழக பிரசாரத்துக்குள் என்ட்ரி கொடுக்கவில்லை. இது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இன்னும் பிரச்சனை முடியவில்லையோ? என்ற வினாவை எழுப்பி உள்ளது. இப்படியான சூழலில் தான் நாளை சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் மற்றும் பரப்புரை நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
சேலம் என்பது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமாகும். இது அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இதனால் இந்த பிரசாரத்தில் பங்கேற்க வரும்படி ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி சார்பில் இன்னும் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது திமுகவை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. அதேவேளையில் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது திமுக நடந்து கொண்ட விதத்தை ராகுல் காந்தி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் வராமல் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உடன் சேர்ந்து பிரசாரம் செய்வதை தவிர்த்தார். இருவரும் தனித்தனியாக பிரசாரம் செய்தனர். இந்நிலையில் தான் புதுச்சேரியை போன்று தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் உடன் கைகோர்க்க ராகுல் காந்தி தயங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கள் பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழக சட்டசபை தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்'' என்று கூறினார். ஆனால் எப்போது அவர்கள் பிரசாரம் செய்வார்கள்? தேதி என்ன? என்பதை கூறவில்லை. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications