இஸ்லாமியர்கள் வாக்குகளை அள்ளும் திமுக.. தவெகவுக்கு 10% முதல் 15% தான்.. சொல்வது பத்திரிகையாளர் மணி!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு பின் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை திமுக முழுமையாக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் அமைதியாக இருப்பதாக கூறிய அவர், தவெகவுக்கு 10 முதல் 15 சதவிகித வாக்குகளே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது. இதன் காரணமாகவே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இதனால் தமிழக அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் திமுக கூட்டணி கட்சிகளும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் இதுவரை எந்தவித கருத்தையும் சொல்லவில்லை. இது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் மணி பேசுகையில், விஜய் இதுவரை வெளியிலேயே வரவில்லை.
அவர் என்ன அரசியல் கட்சித் தலைவர்.. வெளியில் வராத ஒரு தலைவரை வைத்துக் கொண்டு எப்படி தேர்தலை சந்திக்க முடியும்.. ஆதரவாளர்கள் இருந்தாலும், அதனை வாக்காக பூத்திற்கு கொண்டு வர வேண்டும்.. அதற்கு திமுகவுக்கு நிகரான கட்டமைப்பு அதிமுகவிடம் மட்டுமே உள்ளது. அரசியலில் பால பாடத்தை கூட தவெக மற்றும் விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு முன் சிறுபான்மை மக்களின் வாக்குகள் விஜய் பக்கம் செல்லாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு.. சிறுபான்மை மக்களின் இருப்புக்கு கேள்வி எழும் போது, அவர்கள் திமுக பக்கமே செல்வார்கள். சிறுபான்மை மக்களின் நோக்கம், யார் வரக்கூடாது என்பதுதான். சின்ன பசங்க மட்டும் தான் தவெகவுக்கு வாக்களிப்பார்கள்.
விஜய்யால் அதிகபட்சம் 10 முதல் 15 சதவிகிதம் வரை வாக்குகளை பெற முடியும்.. எல்லா தொகுதிகளிலும் 20 சதவிகித வாக்குகளை பெற்றாலும், வெல்ல முடியாது. ஒரு தொகுதியில் வெல்ல வேண்டுமென்றால் குறைந்தது 30 சதவிகித வாக்குகள் தேவை.. அதனால் 4 முனைப்போட்டியில் திமுக முன்னிலையில் உள்ளது. அடுத்த 4 மாதங்களில் திமுக எந்த சிக்கலிலும் சிக்காமல் இருந்தால் போதுமானது.
விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.. சிறுபான்மை மக்கள் அதனை பார்த்து கொண்டே இருப்பார்கள்.. பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக இருக்கும் போது, அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளாமல் விஜய் அமைதி காக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications