"சட்டசபை நேரலை குறித்து அதிமுக கேள்வி கேட்பது வேடிக்கை".. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
சென்னை: சட்டசபை நடவடிக்கைகளின் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக அதிமுக எழுப்பி வரும் கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஆட்சியில் முதல்வரின் பேச்சு மட்டுமே நேரலையில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், தற்போது அதே விவகாரத்தில் அதிமுக கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருப்பதாக அவர் விமர்சித்தார்.
இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: ஒரு இயக்கத்தில் இணைவது என்பது எல்லா கட்சியிலும் வரவேற்கத்தக்க ஒன்று. தவெக தலைவர் மக்களுக்கு நன்மை செய்யப் போகிறார். இவர் வழியில் நின்று எல்லா பணிகளையும் ஆற்றுவோம் என்கிற நோக்கத்துடன்தான் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிற போதும் மக்களுடைய வரவேற்பு இருக்கிறது. மாற்றுக் கட்சியினர் சொல்வது போல அல்ல.

இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையோடு, தொலைநோக்கு பார்வையோடு முதல்வர் விஜய் செயல்பட்டு திட்டங்களை தீட்டி வருகிறார். தவெகவுக்கு வலு சேர்க்கிற வகையில் நிறைய இயக்கங்களில் இருந்தும், குறிப்பாக அதிமுகவில் இருந்து பலரும் இணைகிறார்கள் என்று சொன்னால் ஒன்றை தான் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஒரு முதல்வர் ஆகலாம் என்ற சிந்தனையே தவறு. எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழி நடத்திச் செல்லவில்லை. அந்த வகையில் தான் பலரும் இன்றைக்கு தவெகவில் இணைந்து வருகின்றனர். எனவே, எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தான் யோசிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் சட்டசபையில் முதல்வர் பேசுவது மட்டுமே நேரலையில் வந்துள்ளது. வேறு யாருடைய பேச்சும் வராது. ஆனால் இப்போது அதற்கு அதிமுக கேள்வி கேட்பது வேடிக்கை. ஏதேனும் சிறு, சிறு குறைகள் இருக்கலாம். யாருக்கும் பாகுபாடு இல்லாத வகையில் செயல்படுவோம். இதுவரை கட்சியில் இணைந்த யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.












Click it and Unblock the Notifications