3 மாதத்திற்கு ஒரு வீடியோ.. விஜய் அதற்கு சரிபட்டு வரமாட்டார்.. கொந்தளித்த மருது அழகுராஜ்!
சென்னை: 3 மாதத்திற்கு ஒருமுறை 3 நிமிடங்களுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டால், ஒருநாளும் அதிமுகவின் இடத்தை பிடிக்க முடியாது என்று திமுக நிர்வாகி மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தாழ்ந்து கொண்டிருக்கும் போது, அந்த இடத்திற்கு விஜய் வருவார் என்று தாம் நினைத்ததாக கூறிய மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கீழ் விஜய் கூட்டணி என்று செல்வது கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம் என்று கூறியுள்ளார்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என்று இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் ஆதரவாளராக மருது அழகுராஜ் மாறினார். தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதவாக பணியாற்றிய மருது அழகுராஜ், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்தார். இதன்பின் விஜய்க்கு சாதகமாக பல்வேறு கருத்துக்களை பேசி வந்தார்.

இதனால் தவெகவில் மருது அழகுராஜ் இணையலாம் என்று கூறப்பட்ட சூழலில், திடீரென முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவில் மாநில செய்தித் தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் மருது அழகுராஜ் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் தவெக குறித்து மருது அழகுராஜ் பேசுகையில், அதிமுக தன் நிலையில் இருந்து தாழ்ந்து கீழே வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தவெக முயற்சிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த முயற்சியை தவெக முன்னெடுக்கவில்லை. உண்மையில் அதிமுக நிலைக்கு விஜய் தன்னையும், தனது கட்சியையும் உயர்த்திக் கொள்வார் என்று நினைத்தேன்.
ஆனால் விஜய் 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டும் 3 நிமிட வீடியோவை வெளியிடுகிறார். 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி நிரப்ப வேண்டும் என்ற போது, இப்படியான செயல்பாடுகள் மூலமாக அது நடக்கப் போவதில்லை. அதேபோல் அதிமுக - தவெக கூட்டணி அமைத்தாலும் ஆட்சி மாற்றக் நடக்கும் என்று நினைக்கவில்லை. இப்போது உள்ள அதிமுக முழுமை பெற்ற அதிமுக இல்லை.
நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி என்ற பலவீனமான தலைமையின் கீழ் விஜய் கூட்டணிக்கு சென்றால், அது கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம். அதேபோல் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால், எதிர்க்கட்சி என்ற இடத்தை மட்டும் அதிமுகவால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் இவர்கள் ஒன்றாக இணைந்தாலும், ஒன்றாக இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications