மக்கள் பிரச்சனையை விஜய் பேசுகிறாரா? தவெகவுக்கு 2.5 கோடி ஓட்டு என்பது பேராசை.. நேரடியாக சாடிய திமுக!
சென்னை: நான் முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை கருத்தை சொல்லி விஜய் ஊர்வலம் வருவதாக திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்சனைக்காகவோ, மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்தோ போராடாத விஜய்யை மக்கள் ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தவெகவின் 3வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் நேற்று அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய் பேசுகையில், அறிஞர் அண்ணா அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டதை நினைத்து எண்ணி கண்ணீர் வடித்தேன் என்றும், அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் அதிமுக. 2017 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டின் நிலையை மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.

காமராசர், அண்ணா, எம்ஜிஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டது என்று கண்ணீர் வடித்தார்கள். அந்தக் கண்ணீரை துடைக்க தொடங்கப்பட்ட இயக்கம் தான் தவெக. அன்று எம்ஜிஆரை விமர்சித்த அதே வார்த்தையை நமக்கும் பயன்படுத்துகிறார்கள். தீய சக்தியையும், ஊழல் சக்தியையும் வீழ்த்த தூய சக்தியான தவெகவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார்.
விஜய்யின் இந்த பேச்சு வழக்கம் போல் பஞ்ச் டயலாக்காகவே அமைந்தது. இது திமுக மட்டுமல்லாமல் அதிமுகவையும் சீண்டியதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், விஜய் என்ன செய்தார் என்றே தெரியவில்லை.. மக்கள் பிரச்சனைக்காக போராடுகிறாரா? மக்கள் பிரச்சனைகளை பேசுகிறாரா? மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறாரா?
எதுவுமே செய்யவில்லை. தாம் முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை கருத்தை சொல்லி ஊர்வலம் வருகிறார். அவருக்கு மக்கள் முக்கியம் இல்லை. தான் முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் பேசி வருகிறார். அதனால் விஜய்யை மக்கள் ஏற்கப் போவதில்லை. திமுக 75 ஆண்டு கால கட்சி.. இவர் எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டு கொள்கிறார். அதுதான் வியப்பு.
ஏனென்றால் எம்ஜிஆர் சுமார் 20 ஆண்டு காலம் திமுகவில் பொறுப்பில் இருந்தவர். திராவிட கொள்கைகளை தனது படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றவர். திமுகவின் முன்னணி தலைவராக இருந்தவர். அண்ணாவின் புகழை பாடியுள்ளார். அதனால் மக்களிடம் எம்ஜிஆர் விரைவாக சென்றார். ஆனால் விஜய் எதையும் பேச மாட்டார். முதல்வராக வேண்டும் என்பதே ஒற்றை எண்ணம்.
1972க்கு பின் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தது. அதனால் எம்ஜிஆரை விமர்சித்தோம். அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்த்தோம். தமிழ்நாட்டில் 2.5 கோடி வீடுகள் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஓட்டு என்றால், தவெக 2.5 கோடி வாக்குகள் பெற வேண்டும். நினைத்து பார்த்தால் அது எவ்வளவு பெரிய பேராசை என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications