“திருமா வெளியேறினால் திமுக காலி.. ஸ்டாலினுக்கு தான் ஆபத்து”.. காரணம் சொல்லும் சீனியர் புள்ளி!
சென்னை: "கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறினால் திமுக காலி." என நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
கேள்வி: திமுகவை நம்பி மட்டுமே விசிக இல்லை, திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதால் நம்மை பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பற்றி?

பத்திரிகையாளர் மணி: 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக திமுக தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி வந்த பிறகு, திமுக தரப்பின் ஒரு பிரிவில் ஒரு தகவல் பரப்பி விடப்படுகிறது. ஏனெனில் அவர் பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கு போகவே மாட்டார். தவெக கூட்டணியில் சேர்வதிலும் அர்த்தம் இல்லாதது. எனவே திமுக தரப்பு, விசிகவுக்கு வேறு வழியே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டது.
திருமா காயப்பட்டுள்ளார்
கொடுக்கும் சீட்களை வாங்கிக்கொண்டு சும்மா இருங்க என கூட்டணி கட்சிகளுக்கு மறைமுகமாகச் சொல்லும் பணிகளில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர். அதுதான் திருமாவளவனை காயப்படுத்தி இருக்கிறது. எனினும், விசிகவுக்கு இப்போது இருக்கும் எம்.எல்.ஏக்களை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றால் திமுகவின் தயவு திருமாவளவனுக்கு தேவை.
ஆனால் இதை வைத்து கூட்டணி கட்சிகளை அடக்க நினைத்தால் உள்ளே கலகம் வெடிக்கும். அதன் சமிக்ஞை தான் திருமாவளவனின் பேச்சு. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நிர்ப்பந்தம் திமுகவுக்குத் தான். திருமாவளவன் ஒன்றும் ஆட்சியைப் பிடிக்கப்போவது இல்லை.
வலிமையான கூட்டணியாக இருக்கும்
அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இணையப்போகிறது. கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜிகே வாசன், ஜான் பாண்டியன் என மிக பலம் வாந்த கூட்டணி உருவாகிவிடும். அப்படி இருக்கும்போது விஜய் உடன் திருமாவளவன் சேர்ந்தால் அந்த கூட்டணி வேண்டுமானால் ஜீரோ ஆகலாம். ஆனால் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுகவுக்குத்தான் விசிக அதிகமாக தேவை. விசிக இல்லை என்றால் திமுகவுக்குத்தான் அதிக பாதிப்பு.
பாமகவை கூட்டணியில் சேர்த்தால் விசிக நிச்சயம் வெளியேறும். அப்படிப்பட்ட நிலையை திமுக விசிகவுக்கு ஏற்படுத்தினால் அதை விட ஒரு அரசியல் அவலம் திமுகவுக்கு இருக்க முடியாது. திமுக விசிகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுமானால் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. படுதோல்வியைத் தழுவும். எனவே விசிகவை ஸ்டாலின் இழக்கமாட்டார்.
திமுகவுக்கு பேராபத்து
கம்யூனிஸ்ட்கள் கூட்டணியை விட்டுப் போனால் கூட அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், திருமாவளவன் உறுதியாக நிற்கக்கூடியவர். அவர் போனால் இழக்கப்போவது என்ன என்பதை ஸ்டாலின் உணர்ந்து தான் இருப்பார். எனவே அந்தத் தவறை ஸ்டாலின் செய்யமாட்டார். திருமா வெளியே சென்றால் திமுகவுக்கு பேராபத்து. மக்கள் நலக் கூட்டணி 0 தான், ஆனால் திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் செய்தது அந்தக் கூட்டணி.
கடந்த 3 - 4 ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் விசிக கொத்தடிமையாக இருக்கிறது என்ற பேச்சுகளை திமுகவினர் பேசி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜகவுக்கு விலை போகாத ஒரே தலித் தலைவர் திருமாவளவன் தான். எவ்வளவோ வலை வீசியும், கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தளராதவர் திருமாவளவன். பாஜகவால் கபளீகரம் செய்ய முடியாத ஒரே தலைவர் திருமாவளவன்." இவ்வாறு தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் மணி.












Click it and Unblock the Notifications