மத்திய அரசு - அமித்ஷாவுக்கு எதிர்ப்பு.. 200 தொகுதிக்கு குறி.. திமுக செயற்குழுவின் 12 தீர்மானம் இதோ
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடந்தது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தீர்மானம் என்பது மத்திய அரசு மற்றும் அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் உள்ளது. அதோடு 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக திமுக உள்ளது. பொதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதேபோல் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அந்த வகையில் திமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இந்த செயற்குழு கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறி வரும் நிலையில் அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று தீர்மானத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல், வெள்ள நிவாரணம், மத்திய அரசு நிதி, அம்பேத்கர் குறித்து ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையானதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழுவில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 8 தீர்மானங்கள் மத்திய அரசு மற்றும் அமித்ஷாவுக்கு கண்டனமாக அமைந்துள்ளது. இந்த செயற்குழுவில் முதல் தீர்மானம் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்பதாகும். ஜனநாயகத்துக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. 2வது தீர்மானம் பார்லிமென்டில் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டது. 3வது தீர்மானம் என்னவென்றால் தமிழகத்துக்காக பேரிடர் நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் மக்களை வஞ்சிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
4வது தீர்மானத்தில் தமிழக அரசு கோரிய ரூ.6,675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 5வது தீர்மானத்தில் பெஞ்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 6 வது தீர்மானத்த்தில் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு, தமிழகத்திற்கு போதுமான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 7 வது தீர்மானத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற இன்றே புறப்படுவீர். தி.மு.க., அரசின் சாதனைகளை போர்ப் பரணி பாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
8 வது தீர்மானத்தில் தமிழகத்தில் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 9 வது தீர்மானத்தில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பேரறிவுச் சிலையாக போற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. 10வது தீர்மானத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
11வது தீர்மானத்தில் கனிம சுரங்கச் சட்டத்தை ஆதரித்த அதிமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 12வது தீர்மானத்தில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக திமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதோடு திமுகவின் இந்த செயற்குழு கூட்டம் கடந்த 18 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த செயற்குழு கூட்டம் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications