ஜெயலலிதா பாணியில் உதயநிதி ஸ்டாலின்! திக்குமுக்காடி ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக இளைஞரணி நிர்வாகி!
சென்னை: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் தேர்வு விவகாரத்தில், எந்தவித சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக நின்றது திமுகவில் பேசு பொருளாக உள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் என யாருடைய வாரிசுகளுக்கும் பதவி கொடுக்காமல் எளிய பின்னணியை கொண்ட பலருக்கும் முகவரி கொடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் களங்காணி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர், தனக்கு திமுக இளைஞரணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டதை அறிந்து ஆனந்தக் கண்ணீரே வடித்துவிட்டாராம்.
’தலைவர்’ டேபிளில் பட்டியல்! டிக் அடிக்கத் தயாராகும் ஸ்டாலின்! ஆவலோடு காத்திருக்கும் உடன்பிறப்புகள்!
ஜெயலலிதா பாணி
ஜெயலலிதாவை பொறுத்தவரை கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி எளிய பின்னணியை கொண்டவர்களை அடுத்தடுத்து முக்கியப் பதவிகளை கொடுத்து முன்னுக்கு கொண்டு வருவார். உழைத்தால் நிச்சயம் பலன் உண்டு என்பதை இதன் மூலம் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அவர் உணர்த்தி வந்தார். இதனால் தான் அதிமுகவால் அதிக முறை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் பட்டியல் தேர்வில், ஜெயலலிதா பாணியில் செயல்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
புது முகவரி
கட்சியில் பெரியளவில் பேசப்படாத, யாரும் அறிந்திராத வண்ணம் அவரவர் மாவட்டங்களில் கட்சிப் பணியாற்றி வந்த 8 புது முகங்களுக்கு புது முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் உதயநிதி. திமுக இளைஞரணி துணைச் செயலாளர்களாக இதுவரை அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரும் இருந்திடாத நிலையில், முதல்முறையாக அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஆனந்தக் கண்ணீர்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட களங்காணி என்ற குக்கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார், இதனை எண்ணி ஆனந்தக் கண்ணீரே வடித்திருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்கள் விவரம் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகே மாவட்டச் செயலாளர்களுக்கு தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு மிகவும் சஸ்பென்ஸாக இந்த நியமனங்களை நடத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அருந்ததியினருக்கு முக்கியத்துவம்
அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அந்தியூர் செல்வராஜ் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார், மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராக்கப்பட்டார், இப்போது ஆனந்தகுமார் என்ற இளைஞர் மாநில பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக, பாஜகவை காட்டிலும் அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு தாங்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை திமுக தலைமை உணர்த்தியுள்ளது.