முறையாக மாஸ்க் அணிந்த சிறார்கள்.. கிரிக்கெட் பேட் வழங்கி உற்சாகப்படுத்திய உதயநிதி..கொரோனாவை வெல்வோம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி முறையாக மாஸ்க் அணிந்த சிறார்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கி உதயநிதி உற்சாகப்படுத்தினார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா முதல் அலையைக் காட்டிலும் தற்போது பரவும் 2ஆம் அலையின் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் நேற்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிக அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவ காரணம்
தமிழகத்தில் முறையான கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன் வைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முறையாக மாஸ்க்குகளை அணியாமலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதும் கொரோனா பரவலுக்கு வழிவகுத்துள்ளது.

சிறார்கள் மத்தியில் கொரோனா
குறிப்பாக, தற்போது தமிழகத்தில் சிறார்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மத்தியிலான தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 1307 வரை சென்றது. சிறார்களுக்கு தற்போது வரை தடுப்பூசிகளும் எதுவும் இல்லை என்பதால் கொரோனா பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிரிக்கெட் பேட் அளித்த உதயநிதி
தற்போதுள்ள சூழ்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது மட்டுமே சிறார்கள் மத்தியிலான கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே திமுக இளைஞரணி செயலர் உதயநிதி, தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி மாஸ்க் அணிந்த சிறார்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

உதயநிதி ட்வீட்
இது குறித்து உதயநிதி தனது ட்விட்டரில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, நடேசன் சாலை பகுதியில் கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முறையாக முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்-சிறுமியரை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பேட் மற்றும் பந்து வழங்கினேன். முகக்கவசம்,தடுப்பூசி மூலம் கொரோனாவை வெல்வோம்" என பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications