ஸ்டாலின் இடத்தில் உதயநிதி ஸ்டாலின்! நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் செல்கிறார்!
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக, நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
முதுகுவலி காரணமாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து செய்த நிலையில், உதயநிதி பசும்பொன் செல்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பசும்பொன் வருகை குறித்த தகவலால் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முத்துராமலிங்கத் தேவர்
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நாளை பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தார்.

அமைச்சர்கள்
இதற்காக இன்றிரவே மதுரை சென்று தங்கவும் முதல்வர் திட்டமிட்டிருந்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட கடும் முதுகு வலியால் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்றும் ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தனக்கு பதில் தனது பிரதிநிதிகளாக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக அறிவித்தார் ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்
இதனிடையே என்னதான் அமைச்சர் துரைமுருகன் பசும்பொன் சென்றாலும் கூட, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலினின் வருகையை தான் பெரிதும் எதிர்பார்த்தனர். அமைச்சர்களின் பசும்பொன் வருகையை காட்டிலும் உதயநிதி ஸ்டாலினின் வருகை கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் நாளை பசும்பொன் செல்லவுள்ள நிலையில் ஸ்டாலினின் பிரதிநிதியாக உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என கட்சியினர் எதிர்பார்த்தனர்.

கள்ளக்குறிச்சி நிகழ்ச்சி
இதனிடையே திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே திருமண விழா ஒன்றை நாளை நடத்தி வைக்க உதயநிதி ஸ்டாலின் தேதி கொடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. தற்போது அவரது நிகழ்ச்சி நிரல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications