விக்கிரவாண்டி: திமுக 67,757 வாக்கு வித்தியாசத்தில் மெகா வெற்றி.. தலைவர்கள் பிரசாரம் செய்யாமலே சாதனை
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,000-க்கும் அதிகமான வாக்குகளுடன் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொகுதியில் பிரசாரம் செய்யவில்லை. வீடியோ மூலம் மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இத்தேர்தலை புறக்கணித்ததாலும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நிலைப்பாடு எடுத்ததாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் களம் கண்டனர். இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுகவின் அன்னியூர் சிவா அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி 2011-ல் தான் உருவானது. ஆனால் இதுவரை 2019, 2021 என இரு இடைத் தேர்தல்களை எதிர்கொண்டது. 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் நா. புகழேந்தி லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும்; தலைவர்கள் பிரசாரம் களைகட்டும். ஆனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அப்படி எதுவும் பரபரப்பானதாகவும் இருக்கவில்லை. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பிரசாரம் செய்யவில்லை. ஆனால் வீடியோ பதிவு மூலம் வாக்கு சேகரித்தார்.
அண்ணா திமுகவைப் பொறுத்தவரையில் இடைத் தேர்தலை புறக்கணித்தது. மேலும் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு எனவும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் விக்கிரவாண்டி பக்கம் வரவில்லை. பிரதான கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யாத நிலையில் நடைபெற்றதுதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.
இத்தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தபால் வாக்குகள் முதல் 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கை வரை தொடர்ந்தும் திமுகவின் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications