சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!
சென்னை: இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நாளை (மே 30, சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னையில் பிரம்மாண்டமான முறையில் 'GenZ DMK' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
'ஜென்-இசட்' (Gen-Z) எனப்படும் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் சமூக ஊடகங்கள் வாயிலாகத் திராவிட இயக்கக் கொள்கைகளை இன்னும் ஆழமாகக் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும். திமுக ஆதரவு இளம் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் யாசர் அராபத் (Lawyer Yasar Arafhat) உள்ளிட்ட திமுக ஆதரவு உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் சொந்த முயற்சியில் இந்த எழுச்சிமிகு இயக்கத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.

வாட்ஸ்அப்பில் குவியும் இளைஞர் பட்டாளம்!
இது வழக்கமான அரசியல் மேடையோ அல்லது அதிகாரப்பூர்வ உட்கட்சிக் கூட்டமோ அல்ல. கொள்கை ரீதியாகத் திராவிட இயக்கத்தின் மீது பற்றுகொண்ட இளைஞர்களால், முழுக்க முழுக்க தங்களின் முயற்சியில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பு வேலைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் தளங்களில் மிக ஆக்கப்பூர்வமாக நடந்து வருகின்றன. பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கப்பட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள், மற்றும் திமுக ஆதரவு மீம் கிரியேட்டர்கள் மின்னல் வேகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த வாட்ஸ்அப் நெட்வொர்க் மூலமாகவே அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் நாளை மாலை நிகழ்ச்சி நடக்கும் இடம் குறித்த விவரங்கள் மிக உத்வேகத்துடன் பகிரப்பட்டு வருகின்றன.
பூங்காவில் இல்லை; பிரம்மாண்ட அரங்கிற்கு மாற்றம்!
முதலில் இந்த விவாதக்கூட்டம் அண்ணா நகர் டவர் பூங்காவில் எளிமையான முறையில் நடத்தப்படுவதாகத் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாட்ஸ்அப் குரூப்கள் வழியாக எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிகமான திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து வருவதால், பூங்காவில் இடநெருக்கடி ஏற்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் கருதுகின்றனர். இதனால், நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் தனி அரங்கில் நடத்த உள்ளனர்.
விவாதத்தின் முக்கிய அஜெண்டா:
2K கிட்ஸ் மொழியில் திராவிட சித்தாந்தம்: இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்களில் வாழும் இந்தத் தலைமுறையிடம், திராவிட இயக்கத்தின் சாதனைகளையும், சமூக நீதிக் கருத்துகளையும் அவர்களின் சொந்த 'ஸ்லாங்'-கில் (Gen-Z Slang) நேர்மறையாகவும் சுவாரசியமாகவும் எப்படிக் கொண்டு சேர்ப்பது?
இளைஞர்களின் புதிய ஐடியாக்கள்: எந்தவித கட்சி ஃபார்மாலிட்டிகளும் இன்றி, இளைஞர்கள் தங்களின் புதிய சிந்தனைகளையும், ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் வெளிப்படையாகப் பேச இந்த மேடை முழு சுதந்திரம் வழங்குகிறது.
டிஜிட்டல் மீடியா வியூகம்: சமூக வலைத்தளங்களில் சமூக நீதி-பெரியாரியக் கருத்துக்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஒரு புதிய, துடிப்பான டிஜிட்டல் படையை உருவாக்குவது இவர்களின் பிரதான இலக்காகும்.
திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் கொள்கைப் பற்றால் வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த 'GenZ DMK' நிகழ்ச்சி, தமிழக இணையவாசிகள் மற்றும் இளம்தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications