இந்த பக்கம் எல்லாம் போகாதீங்க.. சிக்கல்.. தமிழ்நாடு வெதர்மேன் வானிலை வார்னிங்.. ரொம்ப முக்கியம்!
சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மழை காலம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவிற்கு வந்து உள்ளது. கடந்த மாதங்களில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த கடுமையான வெயில் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.
கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், மழைக்காலம் எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அதில், கேரளாவில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்றும் எந்த விதமான மாற்றமும் இருக்க போவது இல்லை. முக்கியமாக காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர் மற்றும் மல்லாபுரம் மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்ய போகிறது.
வயநாட்டில் உள்ள கபினி நீர்பிடிப்பு பகுதியில் 2வது நாளாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவிலும் பெரும் மழை பெய்து வருகிறது. உடுப்பி-மங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மிமீ+ மழை பதிவாகியுள்ளது. குடகிலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்திருக்கும்.
தமிழ்நாட்டில் அவலாஞ்சி பகுதிதான் ஸ்டார். தென்னிந்தியாவில் எந்த பகுதியில் நீலகிரியில் இருக்கும் அவலாஞ்சி பகுதியை முந்தவே முடியாது. அந்த அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் இங்கே மழை பெய்துள்ளது. நேற்று அங்கே 24 மணி நேரத்தில் 184 மிமீ மழை பெய்தது. இன்று அங்கே 200 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையும் அங்கே நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள சின்னக்கல்லாறு 100-150 மிமீ மழை பதிவாகியுள்ளது. இன்றும் அதுபோன்ற மழை பெய்யக்கூடும். அங்கு சின்னக்கல்லாறு பகுதிதான்.
பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தயவு செய்து கேரளா, கோவா, கர்நாடகா கடற்கரை மற்றும் மலையடிவார பகுதிகளுக்கும், நீலகிரி அவலாஞ்சி, பந்தலூர், கூடலூர், மேல் பவானி, பார்சன் பள்ளத்தாக்கு மற்றும் முகூர்த்தி பகுதிகளுக்கும் செல்வதை தவிர்க்கவும்.
கொடைக்கானல், குன்னூர், ஊட்டி, மேகமலை ஆகியவை பயணத்திற்கு பாதுகாப்பான பகுதிகள் ஆகும். சென்னையில் இதமான வானிலையுடன் சிறிது வெயில் மற்றும் மேகமூட்டமான வானிலை தொடரும், என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை என்று குறிப்பிட்டு உள்ளனர். இன்று மட்டுமல்ல அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதன்படி ஜூலை 8ம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. இன்று நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications