விளம்பரம் பேனர் வைக்காதீர்! இனிமேலாவது கேளுங்க! திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்!
சென்னை: தன்னை வரவேற்று ப்ளக்ஸ் பேனர்களோ, விளம்பர பதாகைகளோ, வைக்க வேண்டாம் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் தாம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கட்சியினர் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கட் அண்ட் ரைட்டாக கூறியிருக்கிறார்.

நானும் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன், நீங்களும் கேட்காமல் பேனர் வைத்து வருகிறீர்கள் என நொந்துகொண்ட உதயநிதி, இனிமேலாவது பேனர்களை தவிருங்கள் என அறிவுறுத்தினார்.
தாம்பரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கபடி போட்டியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பிரம்மாண்ட கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடங்கி வைப்பதற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் வான வேடிக்கையாக வண்ண வண்ண மத்தாப்புகளும் வெடிக்கப்பட்டன.
இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான உதயநிதி ஸ்டாலின், மைக் பிடித்தவுடன் முதல் வேளையாக தன்னை வரவேற்று ப்ளக்ஸ் பேனர்களோ, விளம்பர பதாகைகளோ, வைக்க வேண்டாம் என்றும் வெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

வீட்டிலிருந்து தாம்பரம் புறப்பட்ட போது மழை பெய்து கொண்டிருந்ததாகவும் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே தாம் வந்ததாகவும் நல் வாய்ப்பாக மழை விட்டதால் கபடி போட்டி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இங்கிருக்கும் கூட்டத்தினர் நிச்சயம் தனது பேச்சை கேட்க வந்திருக்கமாட்டார்கள் என்றும் கபடி போட்டியை பார்க்கவே வந்திருப்பார்கள் எனவும் யதார்த்தமாக பேசினார்.












Click it and Unblock the Notifications