உட்காருங்க.. உட்காருங்க... ஆளுநரை பற்றி பேச வேண்டாம்.. சட்டென சபாநாயகர் போட்ட உத்தரவு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிந்த பின்னர், சட்டசபை உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து பேச முயன்றனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயர் அப்பாவு உட்காருங்க.. உட்காருங்க. எல்லாரையும் பேச விடுகிறேன்.. ஆளுரை பற்றி பேச வேண்டாம். அதற்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரச சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை சில மாதங்கள் நிலுவையில் வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பினார். ஆளுநரால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும். மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு அவர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும். இதுதான் அரசியல் அமைப்பு சட்ட விதியாகும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அதனை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது தமிழக மக்களையும், சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மேலும் மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆளுநர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் முறையாக பதில் அளித்திருக்கிறோம் என்றும் முதல்வர் கூறினார். மேலும் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஸ்டாலின் வரிசையாக தீர்மானங்களை முன்மொழிந்துவிட்டு அமர்ந்தார். பின்னர் உறுப்பினர்கள் எழுந்து பேச முயன்றனர்.

அப்போது சபாநாயகர் அப்பாவு உடனே அவர்களிடம் உட்காருங்க.. உட்காருங்க.. பேச அனுமதி கொடுப்பேன். முதல்வர் அவர்கள், திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை பேச வேண்டும்.
பேச முன்வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் பற்றியோ, இந்திய நாட்டில் உள்ள நீதிமன்றங்களை பற்றியோ அல்லது மாண்புமிகு ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை.. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே உங்களுக்கு இது தெரிந்த ஒன்று தான்.. ஆகவே நம்முடைய முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்-.












Click it and Unblock the Notifications