நியூ இயர் டூர் பிளான் ரெடியா? இந்தந்த நாடுகளுக்கு செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையே இல்லை!
சென்னை: இந்தந்த நாடுகளுக்கெல்லாம் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையே இல்லை என்பது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட்டுடன் விசாவும் தேவைப்படுகிறது. இந்த நாட்டுக்கு நீங்கள் வரலாம் என்பதற்காக அந்த நாடு கொடுக்கும் ஒப்புதல் சான்றுதான் விசா என அழைக்கப்படுகிறது.

அது போல் பாஸ்போர்ட்டானது, சொந்த நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லலாம். சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் இல்லை என்பதற்கான அத்தாட்சியாகும். இந்த நிலையில் பாஸ்போர்ட் கிடைத்துவிட்டாலும் பல இடங்களில் விசா கிடைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
பெரும்பாலான நாடுகள் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தற்போது பெரும்பாலான மக்கள் அச்சமின்றி வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டின் போது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட சில நாடுகள் விசா மற்றும் விமானங்களில் இந்தியர்களுக்கு பல சேவைகளை வழங்குகின்றன.
இப்போது பல நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விசா இலவச நுழைவு மற்றும் விசா ஆன் அரைவல் சேவைகளை வழங்குகின்றன. இதுவரை தாய்லாந்து, இலங்கை, பூடான் போன்ற நாடுகள் போன்றவை சலுகை கொடுத்து வந்த நிலையில் அந்த லிஸ்ட்டில் மலேசியாவும் சேர்ந்து கொண்டது. இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா வழங்குவதாக அறிவித்துள்ளது.
மலேசியாவில் இந்தியா மற்றும் சீனாவின் குடிமக்கள் 30 நாட்களுக்கு இலவச விசா அனுமதியை வழங்கியுள்ளார். இந்தியர்களும் சீனர்களும் விசா இல்லாமல் மலேசியாவுக்கு செல்லலாம். அங்குள்ள விமான நிலையத்தில் நீங்கள் விசா ஆன் அரைவல் சேவையை பெறலாம். இந்த நடைமுறைகள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வந்துள்ளது.
மலேசியா இமிகிரேஷனில் நீங்கள் காட்டுவதற்கு பாஸ்போர்ட், ரிட்டர்ன் டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவுக்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். மலேசியா தனது பொருளாதார நிலையை வலுப்படுத்த சுற்றுலாவை மேம்படுத்தி வருகிறது. தாய்லாந்து இந்தியர்களுக்கு இலவச விசா வழங்குகிறது.
இந்தியர்கள் இனி எந்த விசா கட்டணமும் இல்லாமல் தாய்லாந்து செல்லலாம். இந்தியர்களுக்கான தாய்லாந்து விசா கட்டணம் சுமார் ரூ 3000 இருந்தது. இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த சலுகை மே 2024 வரை இந்தியர்கள் பெறலாம். இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை இலவச விசாக்களை முன்னோடித் திட்டமாக வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அக்டோபர் 24 ஆம் தேதி ஒப்புதல் அளித்துவிட்டது.
இந்தச் சேவை 31 மார்ச் 2024 வரை கிடைக்கும். பூட்டானில் ஏற்கெனவே இந்தியர்களுக்கு நுழைவு இலவசமாகும். இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு வியட்நாமும் விசா இல்லாத நுழைவு திட்டத்தை தொடங்க உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க்,ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் வியட்நாமில் விசா இலவசமாக பெறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications