ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025! திமுக Vs நாதக! 2016, 2021 தேர்தல்களில் நிலவரம் என்ன?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டும் 2021 ஆம் ஆண்டும் என்ன நிலவரம் இருந்தது என்பதை பார்ப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது 3ஆவது முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வென்றார். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் (இடைத்தேர்தல்) நடத்தப்பட்டது.

அப்போது அந்த தேர்தலில் திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். ஆனால் அவரும் உடல்நல பாதிப்புகளால் கடந்த ஆண்டு இறந்தார். இதையடுத்துத்தான் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த சந்திரகுமாரும், நாதகவை சேர்ந்த சீதாலட்சுமியும் போட்டியிட்டனர். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்தன.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2023 ஆம் ஆண்டை காட்டிலும் 7 சதவீதம் அதிகம் ஆகும். இந்த முறை திமுக வெற்றி வாகை சூடிவிடும் என அசால்ட்டாக போட்டியிட்டது. அது போல் திமுக அரசுக்கு எதிராக நிலவும் அலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என நாம் தமிழர் கட்சியும் போராடியது.
கருத்துக் கணிப்புகள்: தற்போது அந்த தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 59 சதவீதம் பேரிடம் எடுத்த கருத்துக் கணிப்புகளில் 17 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களிப்பதாக கூறியிருந்தனர். 16 சதவீதம் பேர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் என கூறியிருந்தனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் திமுகவுக்கு வாக்களிப்போம் என கூறியிருந்தனர்.
இந்த சூழலில் கடந்த 2016-ஆம் ஆண்டும், 2021-ஆம் ஆண்டும் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் என்ன நிலவரம் என்பதை பார்க்கலாம்.
2016 நிலவரம்: கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு, திமுக சார்பில் வி.சி.சந்திரக்குமார், பாஜக சார்பில் ராஜேஷ்குமார் போட்டியிட்டனர். இவர்களில் கே.எஸ்.தென்னரசு வென்றார். அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த திருமகன் ஈவெரா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா, நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
2021 நிலவரம்: இவர்கள் திருமகன் வென்றார். ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தமட்டில் முதலியார் சமூகத்தினரும் கொங்கு வேளாளர் சமூகத்தினரும் அதிகம் வசிக்கிறார்கள். திமுக, நாதக ஆகிய இரு கட்சிகளில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அந்த தொகுதி மக்கள்.

நோ ஆப்ஷன் : அதாவது அவர்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது மஞ்சள் உற்பத்தி, ஜவுளி துறை அதிகம் உள்ள தொகுதியாகும். இங்கு ஆளும் கட்சி வென்றால் தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கலாம்.
எதிர்ப்பு வாக்குகள்: அதே வேளையில் திமுகவுக்கு எதிரான பாஜகவினர், அதிமுகவினர், தவெகவினர், தேமுதிகவினர் தங்கள் வாக்குகளை திமுகவுக்கு செலுத்தியிருப்பார்களா, இல்லை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்தியிருப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். பெரியார் குறித்து சீமான் பல்வேறு கருத்துகளை பேசி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அக்கட்சிக்கு அங்கு மக்கள் செல்வாக்கு இருக்குமா என்பதை ஆழம் பார்க்கும் தேர்தலாகவும் இது இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications