நிர்மலா சீதாராமன் வரியை குறைத்த உடன் ஓடிப்போய் தங்கம் வாங்கியவர்களுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
சென்னை: தங்கம் விலை இன்றைக்கு ஒரு பவுன் 64000 என்கிற அளவிற்கு இருக்கிறது. செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் தோராயமாக 70000 முதல் 72000 வரை ஒரு பவுன் தங்கம் வாங்க நீங்கள் செலவு செய்ய வேண்டியதிருக்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்த போது யாரெல்லாம் ஓடிப்போய் தங்கம் வாங்கினார்களோ.. அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு லாபம் கிடைத்துள்ளது.
தங்கம் விலை கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் அப்படியே டபுள் ஆகிவிட்டது. அந்த கதையை விடுங்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 50 ஆயிரம் என்கிற அளவில் இருந்த தங்கம் ஆனால் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே ரூ.55 ஆயிரம் என்ற நிலையை அடைந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்ததால், ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க முடிவு செய்தது.

இதன்படி பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக குறைத்தார், இதன் காரணமாக தங்கம் விலை அன்றைக்கே அதிரடியாக குறைந்தது. ஜூலை மாத இறுதியில் ஒரு பவுன் தங்கம், ரூ.51 ஆயிரத்துக்கு கீழாக வந்தது. அப்போது ஓடிப்போய் தங்கம் வாங்கிய அத்தனை பேருக்கும் மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. தெரிந்த நண்பர் ஒருவர் கையில் பணமே இல்லாத நிலையில், ஓராண்டு பர்சனல் லோன் போட்டு கிட்டத்தட்ட பெரிய ரிஸ்க் எடுத்து 4 லட்சம் வாங்கினார்.
அந்த பணத்தில் தங்கம் வாங்கினார். அப்போது அவர் தங்கம் வாங்கும் போது,ஒரு பவுன் 51000 என்கிற அளவில் இருந்தது. இன்றைக்கு ஒரு பவுன் விலை 64000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. ஒரு பவுனுக்கு கிட்டத்தட்ட 13000 என்கிற அளவில் அவருக்கு லாபம் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி, செய்கூலி சேதார மதிப்பீட்டை கணக்கிட்டால் இந்த மதிப்பு 15000 என்கிற அளவிற்கு அவருக்கு லாபத்தை தந்துள்ளது.
கிட்டத்தட்ட தனிநபர் கடன் வாங்கிய பணத்தில் மொத்தம் 7 பவுன் தங்கம் வாங்கினார். இப்போது அதன் மதிப்பு பார்த்தீர்கள் என்றால், அப்படியே ஒரு பவுனுக்கு 15000 என்கிற விகிதத்தில் 105000 என்கிற அளவிற்கு அவருக்கு லாபமாக அமைந்துள்ளது. இது ஒருவரின் கணக்கு மட்டுமே.. '
இதுபோல் பலர் கையில் உள்ள தங்கத்தை அடகு வைத்தும், சேமித்த பணத்தை எடுத்தும் தங்கம் வாங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் தங்கம் லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. இதேபோல் கடந்த 2022 ம் ஆண்டு நண்பர் ஒருவர் வீட்டிற்கு லீசுக்கு பணம் கொடுக்க விரும்பினார். ஆனால் பணமாக கொடுக்காமல் தங்கமாக வாங்கி, அதனை அடகு வைத்து கொடுத்தார். அவர் வாங்கும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 40000 ஆக இருந்தது. அவர் அந்த நகையை சில வருடங்களில் திருப்பிவிட்டார். அந்த நகையின் மதிப்புடன் ஒப்பிடும் போது, அவருக்கு லட்சங்களில் லாபம் கிடைத்துள்ளது.
இதேபோல் சில வருடம் முன்பு மத்திய அரசு தங்கப்பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது பலருக்கும் தெரியும். அந்த திட்டத்தில் முதலீடு செய்த அத்தனை பேருக்கும் இப்போது ஜாக்பாட் என்பது போல் லாபம் கிடைத்துள்ளது.அன்றைய தங்கத்தின் மதிப்பையும்,இன்றைய தங்கத்தின் மதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தாலே அவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை சொல்லித் தெரிய தேவையில்லை..
உலக நாடுகளில் பொருளாதாரம் எப்போது எல்லாம் சிக்கலுக்கு உள்ளாகிறதோ, அப்போது எல்லாம் தங்கத்தின் மதிப்பு ஏறுகிறது. நமக்கு கஷ்டம் வரும் போது எல்லாம் எப்படி கந்துவட்டிக்காரர்கள் சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயருகிறதோ, அதேபோல் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா என எந்த நாடு நெருக்கடியை சந்தித்தாலும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்வது வாடிக்கையாக உள்ளது. தங்கம் விலையை பொறுத்தவரை டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தான் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். அவரது பொருளதாரம் சார்ந்த அதிரடி நடவடிக்கை காரணமாக தங்கம் விலை விரைவில் 70000 த்தை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் தங்கம் வியாபாரிகள்...












Click it and Unblock the Notifications