பலவருட எதிர்பார்ப்பு! தொட்டதெல்லாம் "வெற்றி".. கனிமொழி பொறுமைக்கு கிடைத்த துணை பொது செயலாளர் பரிசு
சென்னை: திமுகவின் மகளிரணி செயலாளராக இருந்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ள கனிமொழிக்கு கிடைத்த மிகப் பெரிய பதவியானது அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசு என்றே கூறலாம்.
திமுக தலைவராக இருந்தவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி. இவர் இலக்கியவாதியாக நன்கு அறியப்பட்டவர். தனது தந்தையை போல் இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.
இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பத்திரிகையாளராகவும் இருந்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியவர். அது போல் 2005 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்காகவும் திருநங்கைகளுக்காகவும் ஒரு போர்ட்டலை உருவாக்கினார்.

கலைஞர் 85
அது போல் கலைஞர் 85 என்ற பெயரில் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திக் கொடுத்தவர். இவரது சமூக பணிகளை பார்த்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கனிமொழி அரசியலுக்கு வந்தால் அவரால் இன்னும் பிற பொதுமக்கள் பயனடைவர் என கருணாநிதியிடம் கோரிக்கைகள் சென்றன.

ராஜ்யசபா எம்பி
அதன்பேரில் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2013 இலும் மாநிலங்களவை எம்பியாக மீண்டும் நியமிக்கப்பட்டார். அப்போது ராஜ்யசபையில் திமுகவின் குரலாக இருந்தவர் கனிமொழி. திமுகவின் மகளிரணி செயலாளராக தேர்வான கனிமொழி பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றக் கோரி மகளிரணியினருடன் டெல்லியில் பேரணியை நடத்தினார். இதன் மூலம் டெல்லியின் கவனத்தை ஈர்த்தார்.

மாநிலங்களவை எம்பி
இந்த நிலையில் தான் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராகவே தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தும் கூட கனிமொழி அதை விரும்பவில்லை. நியமன பதவியை பெறாமல் மக்களை சந்தித்து மக்களவைக்கு செல்ல வேண்டும் என முடிவு எடுத்தார். அதன்படி 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் லோக்சபாவில் திமுக எம்பிக்களின் துணைத் தலைவர் பதவியையும் பெற்றார். பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

மகளிரணி செயலாளர்
மகளிரணி செயலாளராக பதவியேற்ற நாள் முதல் மிகவும் ஆக்கப்பூர்வ அணியாக மாற்றியவர் கனிமொழி. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு டெல்லியில் மகளிரணியினருடன் பேரணி சென்றவர். எந்த நிலையிலும் அதிகார போட்டி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்காதவர்.

பொறுமைக்கு கிடைத்த பதவி
இத்தனை நாட்கள் பொறுமை காத்ததற்கு கிடைத்த பரிசுதான் திமுக துணை பொதுச் செயலாளர் பதவி. கனிமொழி நினைத்திருந்தால் தனக்கு முக்கிய பதவியை தர வேண்டும் என பிரச்சினையை கிளப்பி பெற்றிருக்க முடியும். ஆனால் தனக்கான அளவுகோலை நன்கு தெரிந்து வைத்து தனது திறமையை பார்த்து கட்சி தலைமை பதவியை தர வேண்டும் என பொறுமையுடன் கட்சிக்காக பணியாற்றினார். மகளிரணியை போல் திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலும் கிரீடத்தில் உள்ள வைரம் போல் தனித்து ஜொலிப்பார் என வாழ்த்துவோம்!












Click it and Unblock the Notifications