"யம்மா, நிப்பியா அப்டியே".. மேயரை மிரட்டினேனா.. ப்ரியா என் பொண்ணு மாதிரிதான்.. கே.என். நேரு விளக்கம்
சென்னை மேயர் பிரியாவை அதட்டினேனா என்று கேஎன் நேரு விளக்கம் தந்துள்ளார்
சென்னை: மேயர் பிரியாவை, அமைச்சர் நேரு மிரட்டியதாகவும், அதட்டியதாகவும், கண்டனங்கள் கிளம்பி உள்ள நிலையில், உரிய விளக்கம் தந்து, அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர்.
383-வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது... இதனையொட்டி செய்தியாளர் சந்திப்பும் நடந்தது.. செய்தியாளர்கள் மைக்குடன் தயாராக உட்கார்ந்திருந்தனர்.
அப்போது தான் கொண்டு வந்திருந்த பேப்பரை வாசிக்கட்டுமா? என்று அமைச்சர் நேருவிடம் மேயர் பிரியா கேட்டார்..
அதற்கு நேரு, "ஏம்மா... சொல்லுமா" என்று அதட்டலாக சொன்னார்.. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி முறைகேடு, சென்னையில் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அமைச்சர் நேருவும் பதில் சொன்னார்..
என்ன பண்றீங்க? சட்டென வந்து இறங்கிய ஸ்டாலின்.. அருகிலேயே மேயர் பிரியா.. பார்த்ததும் அரண்ட அதிகாரிகள்
யம்மா, நிப்பியா
பிறகு செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு மேயர் பிரியா எழுந்து சென்றார்.. அப்போது செய்தியாளர்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.. இதைக் கேட்ட அமைச்சர் நேரு, "யம்மா, நிப்பியா அப்படியே" என்று மீண்டும் அதட்டி சொன்னார்.. அமைச்சர் நேரு, மேயர் பிரியாவை என்று ஒருமையில் பேசியிருந்ததும், கடிந்து கொண்டதும் சர்ச்சையை உண்டாக்கியது.. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க துவங்கி விட்டனர்.
நாச்சியாள் சுகந்தி
பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை திமுக அவமதிக்கிறது... இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு' என திமுக மீதும் கேஎன் நேரு மீதும் சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. அதில் ஒருபகுதியாக நாச்சியாள் சுகந்தி தனது கருத்தை கடுமையாக பதிவு செய்திருந்தார்.. "அமைச்சர் நேரு சென்னை மேயரை மிரட்டுகிறார்.. சேகர் பாபு, அது குழந்தை என்கிறார்... தமிழகத்தின் முக்கியமான மாநகராட்சியின் மேயர் பிரியா.
வோடஃபோன் நாய்க்குட்டி
ஆனால் அவரை ஒரு வோடஃபோன் நாய்க்குட்டியை போல நடத்துகிறார்கள் திமுக அமைச்சர்கள்.. சேகர்பாபுவுடன், ஓட்டப்பந்தய வீராங்கனையை போல ஓடவிட்டு உதயநிதியை வரவேற்க விட்டார்கள். இன்னும் இன்னும் எத்தனை அவமானங்களை அம்மேயருக்கு நடத்துவார்களோ தெரியவில்லை... பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் பெண்கள் அரசியல்மயமாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் இடமளிக்க வேண்டும் என்றுதான் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
வணக்கத்திற்குரிய மேயர்
ஆனால்,பட்டியலின பெண்ணை மேயர் ஆக்கிவிட்டோம் என்று அடையாள அரசியல் செய்யும் திமுக மேயர் ப்ரியாவை அறிவாலயத்தின் அழகிய நாய்க்குட்டி என்றே நம்புகிறது. அதற்கேற்றவாரே அவரை நடத்துகிறது.. இதில், தலித் பெண்ணை மேயர் ஆக்கிவிட்டோம். அவரை பார்ப்பனர்களும் வணக்கத்துக்குரிய மேயர் என்றே அழைக்க வேண்டும் என்று வெற்றுப்பெருமை பேசிய வாய்வீச்சுகள் எல்லாம் இப்போது வாய்மூடி இருக்கிறார்கள்? என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.
பேட்டி கொடும்மா
இந்நிலையில், ஒரு பிரபல நாளிதழுக்கு கேஎன் நேரு இதை பற்றி விளக்கம் தந்துள்ளார்.. "திமுகதான் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. 21 மாநகராட்சி மேயர்களில் 11 மாநகராட்சியை பெண்களுக்கு வழங்கியது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு மேயர் பிரியா பேட்டி கொடுக்க முடியாது என்றார்... 'நின்னு பேட்டி கொடும்மா' என்றதோடு உட்கார என் சேரையும் கொடுத்துவிட்டு தள்ளி உட்கார்ந்து கொண்டேன். மேயரை 'வாம்மா... போம்மா' என்றது மகள் போன்ற அர்த்தத்தில்தான்.
என் பொண்ணு மாதிரி
என்னைவிட வயது குறைந்தவர். பிரியா என் பொண்ணு மாதிரி. இதில், எந்த ஆணாதிக்கத்தனமும் இல்லை. சாதி பாகுபாடும் கிடையாது. அந்த வீடியோவை கட் செய்து பரப்பிக்கொள்பவர்கள் பரப்பிக்கொள்ளட்டும். அதுபற்றியெல்லாம், யோசிக்கமாட்டேன். ஏனென்றால், பிரியா என் பொண்ணு" என்று சொல்லி, கிளம்ப வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நேரு..!