திடீரென சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் ஏறிய சிவகார்த்திகேயன்.. திரண்ட பொதுமக்கள்.. என்னாச்சு?
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் திடீரென சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மேம்பாலத்தில் ஏறி நிற்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இப்போது முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் சிவகார்த்திகேயன். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்து சினிமாவில் சாதித்த இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

சிவகார்த்திகேயன்: இவரது பெரும்பாலான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருப்பார். அதில் "துப்பாக்கியை பிடியுங்க சிவா"னு விஜய் சொல்வது டிரெண்டானது. அந்தளவுக்குத் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து இருந்தது. சிவகார்த்திகேயனின் நடிப்பு அப்படியே மேஜர் முகுந்த் வரதராஜனை திரைக்குக் கொண்டு வருவதாக இருந்தது. ரிலீஸாகி இரண்டு வாரங்களுக்கு மேலும் நல்ல வரவேற்பைப் பெற்று அமரன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
அடுத்த பட ஷூட்டிங்: அமரன் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்போது அடுத்த பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தாம்பரம் அடுத்துள்ள சதானந்தபுரம் பகுதியில் அவரது பட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.
மேம்பாலத்தில் ஏறிய சிவகார்த்தியேன்: இன்று காலை முதல் சதானந்தபுரம் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சியைப் படமாக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கயிறுகளுடன் மேம்பாலத்தின் மேல் ஏறி நிற்கிறார். அங்கிருந்து அவர் குதிக்கும் காட்சி இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் சூட்டிங்கை பார்க்க அப்பகுதியில் மக்கள் திரண்டுள்ளனர். வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டு சூட்டிங்கை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இதனால் வாகனங்கள் மெல்லமாகவே அப்பகுதியைக் கடந்து செல்வதால் நெடுங்குன்றம், வண்டலூர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் டிராபிக் பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் இந்த ஷூட்டிங் படங்களும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அடுத்த படங்கள்: அமரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்போது இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல வெங்கட்பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கராவின் புறநானூறு உள்ளிட்ட படங்களிலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications